Wednesday, 17 July 2019

நஜ்தும் அதன் பொருளும் - 4

1. பனு அஸத் பின் குஸைமா  

இவர்கள் முழருடைய கோத்திரத்தாராகும் . இவர்கள் நஜ்துப் பிரதேசத்தில் குடியிருந்தனர் . ஹிஜ்ரி 19ல் இவர்கள் கூபாவை சென்றடைந்தனர் . சண்டையும் ,சச்சரவும் இவர்களின் குணமாகும் . இக்கோத்திரத்தில் இருந்து தான் தன்னை நபியென பிரச்சாரம் செய்த "துலைஹா இப்னு  குவைலித் "என்பவன் தோன்றினான் . 

2.   பனு தமீம் இப்னு முர்ரா 

இவர்களும் முழர்ரின் கிளையாகும் . நஜ்தில் தான் குடியிருந்தனர் . ஹிஜ்ரி 66ல் கூபாவில் நபியென்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டிருந்த முக்தார் ஸகபியுடன்  ஒன்று சேர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக யுத்தம் செய்தனர் . இன்னும் இதே கோத்திரத்தில் இருந்துதான் துல் குவைஸரா பிறந்தான் . இதே போல் நஜ்திய மத்ஹபின் ஸ்தாபகரான நஜ்த் உடைய  ஷெய்கும்  (முஹம்மது பின் அப்துல் வஹாப் ) இதே கோத்திரத்தை சார்ந்தவர் தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒன்றாகும் .


3. பனு தைம் அர்ரபாப் 

இவர்களும் முழர்ரின் கிளையாராகும் . இக்கிளையைச் சார்ந்த கூபாவின் பிரதிநிதியான ராஷித் என்பவன் தான் ஹழ்ரத் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் رضي الله عنه அவர்களை கொலை செய்வதற்காக அப்துர் ரஹ்மான் பின் முல்ஜிம் என்பவனை உருவாக்கியவனாகும் .

  
4. பனு ஸகீஃப்    

இவர்களும் முழர்ரின் கிளையாராகும் .இவர்கள் தாயிப் நகரில் வாழ்ந்தனர் . அதன்பின் கூபாவை சென்றடைந்தனர் .


5. பனு குஃபாஜா 

இவர்களும்    முழர்ரின் கிளையை சார்ந்தவர்களே . இவர்கள் நஜ்தில் வாழ்ந்தனர் .


6. பனு ஸுலைம் பின் மன்ஸுர் 

முழர்ரின் கிளையார் . நஜ்தில் வாழ்ந்தனர் .


7. பனு ஆமிர் இப்னு ஸஃஸஆ    

முழர்ரின் கிளையார் . நஜ்தில் வாழ்ந்தனர் .


8. பனு கத்பான் இப்னு சஃத்   

முழர்ரின் கிளையார் . நஜ்த் வாசிகள் .


9. பனு ஃபஸாரா இப்னு ஸப்யான்   

முழர்ரின் கிளையார் . நஜ்திலும் , வாதியுல் குராவிலும் வாழ்ந்தனர் . கைபர் யுத்தத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக யூதர்களுக்கு உதவி செய்தவர்கள் . அப்துர் ரஹ்மான் ஃபஸாரி இதே கிளையைச் சார்ந்தவன் .


10 .  பனு பக்ர் பின் வாயில் 

ரபீஆவின் கிளையார் . இன்றைய சவூதி அரேபியாவின் ஸ்தாபகர் சவூத் குடும்பத்தினர் இக்கிளையைச் சார்ந்தவர்களாகும் . 


11. பனு தங்லப் பின் வாயில்   

ரபீஆவின் கிளையார் . நஜ்த் வாசிகள் .


12. பனு ஷைபா பின் ஸஃலபா 

ரபீஆவின் கிளையைச் சார்ந்த பக்ர் பின் வாயிலின் குடும்பத்தினராகும் . இக்குடும்பத்தில் தான் க்வாரிஜிய்யீன்களின் முக்கிஸ்தர்கள் தோன்றினர் . நஜ்தில் வாழ்ந்தனர் .

13.அல் பதீகாத் 

அபூ பித்யக் அப்துல்லாஹ் இப்னு தெளர் இப்னு கைஸ் இப்னு ஸஃலபாவின் பிள்ளைகளாகும் . ஷைத்தானின் கொம்பு வெளிப்பட்ட நஜ்தில் வாழ்ந்தவர்கள் .

[ நூல்  - பித்னத்தேன் கா சர்சமீன் ,பக்கம் 88 ]  

அன்புக்குரிய வாசகர்களே ! இதுவரை மேற்கூறப்பட்ட ரபீஆ மற்றும் முழர் கோத்திரத்தார் இன்று இப்னு சவுதின் ஆட்சியின்  கீழிருக்கும்  நஜ்த் என்னும் ரியாத்தில் தான் வாழ்ந்து வந்தனர் . அன்று இஸ்லாமியர்களுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்துக்கும் இவர்கள் தான் காரண கர்த்தாக்களாகும் . பின்னர் காலப்போக்கில் இஸ்லாம் எங்கெல்லாம் பரவியதோ அங்கெல்லாம் இவர்கள் சென்று குழப்பத்தையும் ,பிரச்சனைகளையும் ஏற்படுத்தினர் . 

இவ்வகையில் இவர்கள் ஈராக்கில் உள்ள கூபா ,பஸ்ரா போன்ற பகுதிகளுக்குச் சென்று குடியேறி பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கினர் . எனவே ஈராக்கில் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்திற்கும் இந்த நஜ்திகள் தான் காரணமாகும் . எதார்த்தமான இந்த உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டு ரபீஆ மற்றும் முழருடைய கோத்திரத்தார் ஈராக்கில் தான் வாழ்ந்ததாகவும் ,நபியவர்களால் சொல்லப்பட்ட நஜ்த் ஈராக் தான் என்று பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் .

இனி எதிர் தரப்பார் தமது கூற்றுக்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் விஷயங்களில் அடுத்து வருபவை மிக மிக முக்கியமானதாகும் . அதாவது அவர்களது கருத்துக்கு உயிர் நாடியைப்  போன்றதாகும் . இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவெனில் இவர்களால் பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகளைக் கொண்டுள்ள  நூல்களென்று இவர்களாலேயே புறக்கணிக்கப்படுகின்ற நூல்களிலிருந்து அதற்குரிய ஆதாரத்தை நமக்கு எடுத்துக் காட்டுவதேயாகும் . அதையும் உங்களின் பார்வைக்கு தருகின்றோம் .....


     
 "யா அல்லாஹ் ! எங்களுடைய கொடுக்கல் வாங்கலில் பறக்கத்து செய்வாயாக    என்பதாக மூன்றுமுறை நபியவர்கள் பிரார்த்தித்தார்கள் . அப்போது ஒருவர் ,எங்களுடைய ஈராக்கிற்கு பிரார்த்தியுங்கள் என்று சொல்ல ,அங்கே குழப்பங்களும் ,பிரச்சனைகளும் இருப்பதாகவும் ,அங்கிருந்து தான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என்றும் அருமை நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் சொன்னார்கள் ". 

[ நூல்  - ஹுல்யத்துல் அவ்லியா ,அறிவிப்பாளர் -  ஹழ்ரத் செய்யிதினா உமர் رضي الله عنه அவர்கள் , பாகம் 6, பக்கம் -133 ] 




 " அண்ணலெம் பெருமான்   صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள்  எங்களின் மக்கா ,எங்களின் மதீனா , எங்களின் கொடுக்கல் வாங்கல் ,எங்களின் ஷாம் ,எங்களின் எமன் ஆகியவைகளுக்கு அருள் புரியுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள் . அப்போது ஒருவர் ,அல்லாஹ்வின் ரஸுலே ! எங்களின் ஈராக்கிற்கும்  பிரார்த்தியுங்கள் என்றார் . அதற்கு அங்கு பிரச்னைகளும் குழப்பங்களும் இருக்கிறது . இன்னும் ஷைத்தானின் கொம்பும் அங்கிருந்து தான் உதயமாகும் என்றார்கள் ". 

[ நூல்  - ஹுல்யத்துல் அவ்லியா , அறிவிப்பாளர் -  ஹழ்ரத் செய்யிதினா உமர் رضي الله عنه அவர்கள் , பாகம் 6, பக்கம் -133 ] 




"சுபுஹுத் தொழுகையை நிறைவேற்றிய பின் நாயகம்  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் அங்கு குழுமியிருந்தவர்களை முன்னோக்கியவர்களாக ,யா அல்லாஹ் ! எங்களது மதீனாவிலும் ,எங்களது கொடுக்கல் ,வாங்கலிலும் இன்னும் எங்கள் ஷாமுக்கும் ,எமனுக்கு பரக்கத் செய்வாயாக என்று பிரார்த்தித்தார்கள் .அப்போது ஒருவர் ,எங்களது ஈராக்கிற்கும் பிரார்த்தியுங்கள் என்று சொல்ல ,அதற்கு அங்கிருந்து தான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும் , பிரச்சனைகள் ஏற்படும் என்றார்கள் ".

[ நூல் - மஜ்மவுஸ் ஸவாயித் , அறிவிப்பாளர் - ஹழ்ரத் ஸெய்யிதினா இப்னு உமர் رضي الله عنه அவர்கள் ,பாகம் 3 ,பக்கம் 305 ]  



"யா அல்லாஹ் ! எங்களது ஷாமுக்கும் ,எங்களது எமனுக்கும் பரக்கத் செய்வாயாக என்று பிரார்த்தனை செய்த் பொழுது ,அங்கிருந்தோரில் ஒருவர், யா ரஸூலல்லாஹ் ! எங்களது ஈராக்கிற்கும் பிரார்த்தியுங்கள் என்று சொல்ல , அதற்கு அங்கிருந்து தான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என்றும் ,குழப்பங்கள் வெடிக்கும் என்றும் ஏந்தல் நபி 
صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள்  சொன்னர்கள்   "

[ நூல் - மஜ்மவுஸ் ஸவாயித் , அறிவிப்பாளர் - ஹழ்ரத் ஸெய்யிதினா இப்னு அப்பாஸ்  رضي الله عنه அவர்கள் ,பாகம் 3 ,பக்கம் 305 ]  



"ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் இப்னு கத்தாப் رضي الله عنه அவர்கள் ஈராக் நாட்டுக்கு செல்ல தயாரான பொழுது , ஹழ்ரத் ஸெய்யிதினா கஃபுல் அஹ்பார் رضي الله عنه அவர்கள் ,அமீருல் முஃமினீன் ! ஈராக்கிற்கு செல்லாதீர்கள் . நிச்சயமாக அங்கே பத்தில் ஒன்பது    சதவீதம் சூனியம் இருக்கின்றது . அதுமட்டுமின்றி ஜின்கள் இருப்பதாகவும் , மார்க்கத்திற்கு அழிவு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ள தகவல் என்னை வந்து எட்டியுள்ளது என்றார்கள் "

[ நூல் - முவத்தா ,இமாம் மாலிக் رضي الله عنه அவர்கள் ] 


"ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் رضي الله عنه அவர்களின் புதல்வர் ஈராக் வாசிகளை நோக்கி ,நான் உங்களிடம் சிறு விஷயங்களை குறித்து கேட்கவில்லை . நீங்கள் பெரும் பெரும் விஷயங்களை எல்லாம் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள் . ஆதலால் அருமை நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள்   தங்கள் முபாரக்கான திருக்கரத்தால் கிழக்கு திசை பக்கமாக சைக்கினை செய்து ஷைத்தானின் இரு கொம்புகள் வெளியாவதைக் கொண்டு அங்கிருந்து தான் குழப்பங்கள் உருவாகும் என்று சொன்ன தகவலை நான் எனது தந்தை சொல்லக் கேட்டேன் என்கிறார்கள் " .

[ நூல்  -முஸ்லிம் ஷரீப் ,கிதாபுல் பிதன், இக்மால் ,8-447 , பத்ஹுல் பாரி ,பாகம் 13,பக்கம் 50 ]

மேற்கண்ட ஆறு ஹதீதுகளும் எதிர்தரப்பாரால் தமது கூற்றுக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படுபவைகளாகும் . இவற்றில் இரண்டு ஹதீதுகள் ஹுல்யத்துல் அவ்லியாவில் இருந்தும் , இரண்டு ஹதீதுகள்மஜ்மவுஸ் ஸவாயிதில் இருந்தும் , ஒன்று முவத்தாவில் இருந்தும் , ஒன்று முஸ்லிம் ஷரீபில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளது .

இவைகளில் குறைந்தபட்சம் பலவீனமான படித்தரமுள்ள அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்படும் ஹதீதையே ஏற்றுக் கொள்ள மறுக்கும் இவர்கள் ,இங்கே எடுத்துக் காட்டப்பட்டுள்ள ஆறு ஹதீதுகளிலும் ஒரு ஹதீதைத் தவிர மற்ற ஹதீதுகள் அனைத்தும் எந்த மாதிரியான படித்தரமுள்ளவை என்பதை வஹாபிகளிடமே கேட்டு தெரிந்து கொள்ளட்டும் . இனி அந்த ஒரு ஹதீதுக்குரிய விளக்கமும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினருக்கு சாதகமான ஒன்றே அன்றி அவர்களுக்கு சாதகமானதல்ல .

யாருக்கு சாதகமாக இருந்தால் என்ன ? அவைகளுக்கான விளக்கமென்ன ? என்று நம்மவர்கள் கேட்கலாம் . ஆதலால் சொல்லப்போகும் விளக்கம் சுருக்கமாக இருந்தாலும் அதை ஆழமாக சிந்திக்குமாறு வேண்டுகிறோம் . அதாவது புஹாரி ,திர்மிதி , முஸ்னத் அஹ்மத் போன்ற நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஸஹீஹான ஹதீதுகளில்  ,எங்களுடைய நஜ்த்துக்கும் ,எங்களுடைய கிழக்குப் பகுதிக்கும் பிரார்த்தியுங்கள் என்று கேட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது . காரணம்  அன்று அப்புனித சபையில் நஜ்த்தைச் சார்ந்த தோழர்களும் இருந்ததே அதற்குரிய சான்றாகும் .

அதுமட்டுமின்றி நஜ்துவாசிகளால் நாயகம்  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களுக்கும் ,அவர்களது தோழர் பெருமக்களுக்கும் , பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டதால்    அவைகளை எல்லாம் கருத்தில் கொண்டு நபியவர்கள் பிரார்த்திக்காமல் விட்டுவிட்டனர் .
ஆனால் அப்பகுதியைச் சார்ந்தவர்கள் அவைகளையெல்லாம் தெரிந்து கொண்டே தங்களது பகுதியும் நபியவர்களின் பிரார்த்தனைக்கு வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் ஒருமுறை கேட்கிறார்கள் . அதற்கு நபியவர்கள் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார்கள் . இரண்டாவது முறையாகவும் கேட்கிறார்கள் . அதற்கும் நபியவர்கள் ஒன்றும் சொல்லவில்லை . 

அத்தோடு அத்தோழர்கள் பேசாமல் இருந்திருந்தால் நஜ்த் என்னும் அப்பகுதி இத்தகைய இழிநிலைக்கு தள்ளப்பட்டிருக்காது . அதைத்தான் அருளின் முழு வடிவான நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களும் விரும்பி இருந்திருக்கிறார்கள் . அதே நேரம் கேட்பதைக் கொடுக்கக் கூடிய வல்லமையுள்ளவர்களும் , இல்லதையென்று சொல்லாதவர்களாக நபியவர்கள் இருந்ததால் அத்தோழர்களும் நபியவர்கள் நடந்ததை எல்லாம் மறந்து விட்டு நமக்காக பிரார்த்திக்காமலா போய் விடுவார்கள் என்னும் ஆதங்கத்தில் ஒன்றுக்கு மூன்று முறை கேட்ட போதுதான்  நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களும் நஜ்த் உடைய எதார்த்த நிலையை அத்தோழர்களுக்கு எடுத்துக் காட்டினார்கள் .

அதற்கு மாறாக அப்புனித சபையில் ஈராக் சம்பதமாகச் சொல்லப்படுவதற்குரிய சூழலோ , அல்லது அது சம்பந்தமாக பேசுவதற்கு உரிய ஆட்களோ யாரும் இருக்கவில்லை .  அத்துடன் ஈராக்கை சேர்ந்தவர்கள் யாரும் அதுவரை இஸ்லாத்தை தழுவியதற்கு ஆதாரங்கள் இல்லாத பொழுது ,நபியவர்களிடம் ஈராக்கிற்காக பிரார்த்தியுங்கள் என்று கேட்பதற்குரிய சாத்தியம் அறவே இல்லையாதலால் இது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது .இனி சந்தேகத்திற்குரிய நிலையில் ,சந்தேகத்திற்குரிய ஒன்றை ஆதாரமாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும் ?

இது ஒருபுறமிருக்க ! தற்போதுள்ள நஜ்திகள் மேற்கண்ட ஹதீதுகளில் கூறப்பட்டுள்ள நஜ்த் என்னும் வாக்கியத்தை அந்த இடத்திலிருந்து அகற்றிவிட்டு ,அதற்கு பதிலாக ஈராக் என்னும் வாக்கியத்தை நுழைத்திருக்கலாம் அல்லவா ? ஏனெனில் இதற்கு ஏராளமான ஆதாரங்களும் இருக்கின்றனவாதலால் .மேற்கண்ட ஹதீதுகளில் முதல் நான்கு ஹதீதுகளும் ஆதாரமாகக் கொள்ளப் படுவதற்க்குரிய தகுதி வாய்ந்தவை அல்ல . 

இனி கஃபுல் அஹ்பார் رضي الله عنه அவர்கள் ஹழ்ரத் உமர் رضي الله عنه அவர்களை ஈராக்கிற்கு செல்ல வேண்டாமென சொல்லப்பட்ட ஹதீது , முவத்தாவின் பார்வையில் முர்ஸலானதும் , முஸ்னத் அப்துர் ரஸ்ஸாகின் பார்வையில் முன்கதிவுமாகும் .

இது ஒருபுறமிருக்க இங்கு பேசப்படும் கருத்துக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் இந்த ஹதீது இருப்பதை நாம் காணலாம் . அதற்கு மாறாக சம்பந்தப்படுத்தி முனைவோமாயின் ஹழ்ரத் உமர் இப்னு கத்தாப்  رضي الله عنه அவர்கள் செல்லாத ஒரு பகுதிக்கு தமது தோழர்களை அனுப்புவதற்கு அவர்கள் எப்படி முயற்சித்திருக்க முடியும் ? அது மட்டுமா ! ஈராக் நாட்டை இஸ்லாமிய நாடாக மாற்றி அமைகின்ற விஷயத்தில் கலீபா அவர்கள் எந்தளவுக்கு ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள் என்பதை அடுத்து வரும் சம்பவத்தை கொண்டு நாம் தெரிந்து கொள்ள முடியும் .அச்சம்பவமானது  ...

" ஹமதான் என்னும் பகுதியைச் சார்ந்த 1000 பேர் ஷாமுக்கு ஹிஜ்ரத் செய்யும் எண்ணத்தில் மதீனா முனவ்வராவை வந்தடைந்தனர் .அப்போது ஹழ்ரத் உமர்  رضي الله عنه அவர்கள் , அவர்களனைவரையும் ஈராக்கிற்கு அனுப்ப எடுத்துக் கொண்ட முயற்சியில் இரத்தம் சிந்த வேண்டிய கட்டம் கூட ஏற்பட்டது . இதில் கலீபா அவர்களின் தலையில் இருந்து இரத்தம் வழிவதைக் கண்ட பொது தான் அவர்கள் ஈராக்கிற்கு செல்ல தயாரானார்கள் ."

[ நூல் - முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் ]

மேலும் ஈராக்கில் சூனியம் மலிந்து காணப்பட்டத்தைப் போல ஜின்களின் சாகசங்களும் ஒருகாலத்தில் அங்கே நிறைந்து காணப்பட்டது வாஸ்தவம் தான் . அதன்றி பல்வேறு வகையான பிரச்சனைகளும் அங்கே தலை தூக்கியது உண்மைதான் . இருப்பினும் அவையனைத்தும் காலப்போக்கில் அழிந்து போய் விட்டதோடு அதன்பின் அது விலாயத்தின் சிகராமக திகழத் தொடங்கிவிட்டது .

அதன்றி புண்ணிய பூமியாகவும் , விலாயத்தின் தலைமை பீடமாகவும் விளங்கிக் கொண்டுள்ள ஈராக்கை உலகத்தின் குழப்பத்திற்குரிய பகுதியென சொல்லிக் கொண்டிருப்பவர்கள் தான் காலங்காலமாக இஸ்லாத்தை அழித்தொழிப்பதற்கு திட்டமிட்ட நஜ்துடைய   ஷைகின் சகாக்கள் என்பதையும் நாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றோம் .

இனி நாம் இவ்வாறு சொல்வதை கட்டுக்கதை என்று மறுக்கப்படுமாயின் ,சவூதி பிரகடனப்பட்ட பொழுது அல்லாஹ்வின் ஆலயம் அமைந்துள்ள புனித மக்காவை அல்லது அல்லாஹ்வின் அருமை தூதரான ஈருலக இரட்சகர் நாயகம்  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் மதீனா முனவ்வராவை தலைநகரமாக ஆக்காமல் அல்லாஹ் ,றஸுலுடைய சாபத்திற்கு இலக்கான நஜ்தை பெயர் மாற்றம் செய்து தலைநகராக ஆக்கியது ஏன் ? பதில் தொடர்கிறது .

இதுவரை வல்லோனாகிய அல்லாஹ்வின் பேரருளாலும் , எமது நாதாக்களின் நல்லாசியாலும் அண்ணல் நபியவர்களின் ஹதீதில் சுட்டிக் காட்டப்பட்ட நஜ்த் என்பது இப்புமியிலுள்ள எந்தப் பகுதி ? அது எங்கேயுள்ளது ? அங்கே தோன்றிய பிரச்னைகள் என்ன ? அது எக்காரணம் கொண்டு ஈராக்கை சேர்ந்த பகுதியல்ல என்பதை தகுந்த ஆதாரங்களைக் கொண்டு உங்களின் பார்வைக்கு வைத்தோம் . 

இப்போது அந்த ஹதீதில் சுட்டிக்காட்டப்பட்ட "ஷைத்தானின் கொம்பு " என்பது எது என்பதற்குரிய விளக்கத்திற்காக நமது எழுது கோலை முன்னை விடு கூர்மையாக்கிக் கொண்டு முனைப்போடு சொல்லத் துவங்கின்றோம் . 






No comments:

Post a Comment