Thursday, 25 July 2019

ஷைகு நஜ்தியின் கல்வியும் ,அதற்கான பயணமும்

ஷைகுன் நஜ்த் பேரறிஞர்களின்குடும்ப வாரிசாகப் பிறந்ததால் அவர் தமது தந்தையிடமே ஹன்பலி மத்ஹபின் பிரகாரம் கல்வி   கற்றார் . அவர் கல்வி கற்ற அக்காலம் குறித்து அலீ தன்தாவி ஜெளஹரி என்பார் தமது நூலின் 21ம் பக்கத்தில் ....

 
" ஷைகு நஜ்தி தனது தந்தையிடமே கல்வி கற்றார் . அவர் அப்போதே தனக்கு பிடிக்காத விஷயங்களை எல்லாம் வழிகேடானவை என்று எதிர்த்தார் . இதனால் அனைவரும் அவரை எதிர்க்க துவங்கினர் . அவருடைய தந்தையும் அவர் மீது கோபமுற்றார் . தந்தை பிரச்னைகளை விரும்பாத ஒருவராக இருந்ததால் மகனை பலமுறை எச்சரித்து தடுத்து பார்த்தார் . அதையெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாமல் தனது பேச்சுகளையே தொடர்ந்து பேசி வந்தார் . இந்நிலையில் அவரோடு சிலர் இணைந்து கொண்டனர் . இருப்பினும் பெரும்பாலானோர் அவரை எதிர்த்தே வந்தனர் . இறுதியில் அவருடைய தந்தையிடம் வந்து போய் கொண்டிருந்தோர் இரு பிரிவாக பிரிந்தனர் . சொற்பமானோர் மகனோடும் ,பெரும்பான்மையோர் தந்தையுடனும் இணைந்திருந்தனர் "

[ நூல் - தாரீக் நஜ்தோ ஹிஜாஸ் ,பக்கம் 21 ]

அதன்பின் ஹஜ்ஜுப் பயணத்தை மேற்கொண்ட அவர் மதீனாவுக்கு சென்று சிலகாலம் வரை அங்கே தங்கியிருந்து அங்குள்ள சில உலமாக்களிடம் கல்வி பயின்றார் . புனித மதீனா முனவ்வராவில் அவர் சந்தித்த உலமாக்களை பற்றி நஜ்தைச் சேர்ந்த உஸ்மான் பின் பஷீர் என்பார் 'உன்வானுல்    மஜ்த்  ஃபீ  தாரீகி நஜ்த் 'என்னும் நூலிலும் ,  அலீ தன்தாவி ஜெளஹரி என்பார் 'முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் 'என்ற நூலிலும் கீழ்கண்டவாறு சொல்கின்றனர் . அதாவது .....


"ஷைகு நஜ்தி மதீனா முனவ்வராவில் இருவரை சந்தித்தார் . அச்சந்திப்பால் அவருக்குள் புதியதோர் திருப்புமுனை ஏற்பட்டது . அதில் ஒருவர் நஜ்தைச் சேர்ந்த மஜ்மஃ என்னும் இடத்திலுள்ள அரசியல்வாதியாகவும் ,அறிஞராகவும் இருந்தார் .    அவர் இப்னு தைமிய்யா மற்றும் அவருடைய தோழர்களால் எழுதப்பட்ட நூற்களை மறுஆய்வு செய்யும் ஒருவராக இருந்தார் . அவர்தான் அப்துல்லாஹ் இப்னு இப்ராஹீம் இப்னு ஸைப் என்பவராகும் ".  

இவரை பற்றி ஷைகு நஜ்தி கூறியதாக பின்வருமாறு சொல்லப்படுகிறது ...


"ஷைகு நஜ்தி கூறுகிறார் : ஒருநாள் இப்னு ஸைபிடம் நான் அமர்ந்திருக்கும் போது   மஜ்மஃவாசிகளுக்காக நான் சித்தம் செய்து வைத்துள்ள ஆயுதங்களை காட்டடுமா  என்று கேட்க ,அதற்கு நாம் ஆம் என்றேன் . அப்போது அவர் என்னை நூல்கள் நிறைந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்று இவைதான் அந்த ஆயுதங்கள் என்றார் . இப்னு ஸைப் என்னும் இவர்தான் ஷைகு நஜ்தியை இப்னு தைமிய்யாவுடைய நூற்களை மறுஆய்வு செய்ய தூண்டியவரும் அதற்கு வழிவகுத்தவருமாவார் . "

இவர் ஷைகு நஜ்தியுடைய முதலாவது ஆசிரியராகும் . இனி இரண்டாவது ஆசிரியரைப் பற்றி கூறப்படுவதாவது ....


"ஒருநாள் ஷைகு நஜ்தி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் அறைக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார் . அப்போது அங்கே வருகை தந்தவர்கள் அனைவரும் நபியவர்களிடம் நேரடியாக உதவி தேடிக் கொண்டிருந்தனர் . அப்போது அங்கே வருகை தந்த அவருடைய ஆசிரியரிடம் அது பற்றி ஷைகு நஜ்தி கேட்க ,அதற்கவர் ; இவர்களெல்லாம் நாசமாகப் போகக் கூடியவர்கள் . இவர்கள் செய்யும் இக்காரியம் வீணான ஒன்றாகும் என்று சொன்னார் ." அவர்தான் முஹம்மத் ஹயாத் சிந்தீ என்பவராகும் . 

ஷைகு நஜ்தியாலும் அவருடைய சக இயக்கவாதிகளாலும் மிக மிக வன்மையாக எதிர்க்கப்பட்டு வரும் விஷயங்களில் பிரதானமானது , நபிமார்கள் வலிமார்கள் போன்றோர்களிடம் நேரடியாகவோ அல்லது  அவர்களை பொருட்டாக்கியோ உதவிதேடும் விஷயமாகும் .

இது அவர்களின் பார்வையில் அல்லாஹ்வுக்கு இணை வைக்கக்கூடிய விஷயங்களில்  மாபெரும் குற்றத்திற்குரிய விஷயமாகும் . இதேபோல இன்னும் பல விஷயங்கள் இருந்தாலும் நாம் அடுத்து வரும் பதிவுகளில் உதவிதேடும் விஷயம் சம்பந்தமாக சுருக்கமான விளக்கத்தை பின்னால் பேசுவோம் . 

இருப்பினும் வாசகர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் இங்கே ஒரேயொரு குர்ஆனுடைய வசனத்தை மட்டும் உங்களின் பார்வைக்கு தருகின்றோம் . இறைவன் தனது வேதத்தில் ஸுரா அல் பகராவின் 89ம் வசனத்தில் ....



  "அவர்கள் நிராகரிப்போருக்கு எதிராக தங்களுக்கு வெற்றியைத் தருமாறு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள் " 

என்று கூறுகின்றான் . இவ்வசனத்திற்கு விளக்கமளிக்கும் திருகுரானின் விரிவுரையாளர் அல்லாமா இமாம் இப்னு கதீர் رحمه الله அவர்கள் ,....


"யூதர்கள் ஏந்தல் நபி صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் இப்பூவுலகுக்கு அனுப்பப்படும் முன்பாக அவர்களின் பொருட்டால் அவ்ஸ் மற்றும் கஸ்ரஜுடைய கூட்டத்தாருக்கு எதிராக வெற்றியைத் தருமாறு பிரார்த்தித்து கொண்டிருந்தார்கள் . அரேபியரில் ஒருவராக நபியவர்கள் அனுப்பப்படவே அவர்களை மறுத்து பொய்ப்பித்து விட்டனர் . இவ்வாறு அவர்கள் பொய்ப்பித்ததைக் கண்ட மஆத் இப்னு ஜபல் , பிஷ்ர் பின் அல் பராஃ , தாவூத் பின் ஸலமா போன்ற   தோழர்கள் ,நாங்கள் முஷ்ரிக்குகளாக இருந்த போது எங்களுக்கு எதிராக வெற்றியைத்தா என்று நபியவர்களின் பொருட்டாக்கி உதவி தேடுபவர்களாகவம் , நபியவர்களின் சிறப்பை எங்களுக்கு சொல்பவர்களாகவும் இருந்தீர்கள்.ஆதலால் இப்போது அல்லாஹ்வுக்கு அஞ்சி அந்த நபியைக் கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றனர் ".

ஆனால் இப்போது நம்மிடையே உள்ள தர்ஜுமத்துல்   குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள பொருள் பிழையாக இருப்பதால் அதிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுகின்றோம் . 

இந்த வசனத்தில் சொல்லிக் காட்டப்படுவது போல் நபிகள் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்கள் இவ்வையகத்தில் தோன்றுவதற்கு முன்பே நபியவர்களை பொருட்டாக்கி யூதர்கள் பிரார்த்தித்து வந்ததாக குர்ஆன் சொல்லிக் காட்டுகின்றது என்றால் இப்போது நபியை பொருட்டாக்கி பிரார்த்திக்கலாமா இல்லையா ?   என்பதை நீங்களே தீர்மானியுங்கள் .

அடுத்து ஷைகு நஜ்தி புண்ணிய பூமியான மதீனா முனவ்வராவில் இப்னு தைமிய்யாவின் சீடர்களோடு அமர்ந்ததால் ,அவருடைய கருத்துக்களால் கவரப்பட்டதோடு இப்னு தைமிய்யாவை விட ஒரு படி மேலே சென்று அப்போதிருந்த முஸ்லிம்களையெல்லாம் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் முஷ்ரிக்குகள் எனும் கொள்கையை தனதாக்கிக் கொண்டவராக நஜ்துக்கு திரும்பி சென்றார் . அங்கே சென்றவர் மீண்டும் ஷாம் தேசம் செல்வதற்காக தனது தந்தையிடம் அனுமதி பெற்று பஸரா வழியாக ஷாமை நோக்கி சென்றார் .

பஸ்ராவுக்கு வந்து சேர்ந்தவர் அங்கே சிலகாலம் தங்கியிருந்து முஹம்மத் அல் மஜ்முயி என்பாரிடம் சில விஷயங்களை கற்றுக் கொள்கிறார் . அப்போது பஸராவாசிகளிடம் காணப்பட்ட பல விஷயங்களை அவர் வெறுத்தார் . அது அவ்வூர் மக்களுக்கு தெரிய வரவே அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டார் .

பின்னர் ஷாமுக்கு செல்வதற்கான கட்டுச்சாதம் இல்லாததால் அல் அஹ்ஸாஃ  என்னும் ஊருக்குச் சென்று அங்கேயிருந்த அப்துல்லாஹ் பின் லதீப்    என்பாரின் வீட்டில் தஞ்சம் புகுந்தார் . பின்னர் அங்கிருந்து ஹுரைமலா என்னும் ஊருக்குப் போய் சேர்ந்தார் . அவருடைய தந்தையும் அங்குதான் வசித்துக் கொண்டிருந்தார் . இது சுமார் ஹிஜ்ரி 1139 -கி.பி  1726ஆம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவமாகும் . 


" ஹுரைமலாவுக்கு போய் சேர்ந்த போது அவருடைய தந்தையும் அங்கே இருந்ததால் தந்தையிடமே கல்வியை தொடர்ந்து கற்கலானார் . இருப்பினும் முன்னைவிட இப்போது மிகத்தீவிரமாக நஜ்துவாசிகளின் காரியங்களை எதிர்க்கலானார் . அதனால் தொடர்ந்து தந்தைக்கும் மைந்தனுக்குமிடையே விவாதங்களும் ,தர்க்கமும் அதிகரித்தது . அதேபோல் ஊராருக்கும் அவருக்குமிடையே மோதல்கள் மேலும் வலுக்கத் தொடங்கியது .இந்நிலை ஹிஜ்ரி 1153ஆம் ஆண்டு வரை ,அதாவது  தந்தையின் மரணம் வரை தொடர்ந்தது ."

 [ நூல் -  தாரீக்குன் நஜ்த் -அரபி ,பக்கம் 113 ] 


ஷைகு நஜ்தியும் இந்திய உலமாக்களும்

இந்திய தேசத்தை சார்ந்த தேவபந்திகளால் ஷைகுல் ஹதீதென அழைக்கப்படும் ' அன்வர் ஷாஹ் காஷ்மீரி ' என்பார் ....

anwar shah kashmiri

                                                             
MuqaddamaFaizulBari


"முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் மதிநுட்பம் குறைந்த மடையராகவும் ,அறிவற்றவராகவும் காணப்பட்டார் . அதனால் குப்ரு உடைய தீர்ப்பு வழங்குவதில் அவசரம் காட்டினார் ".

[ நூல் - முகத்தமா ஃபைழுல் பாரி ] 


"அவர் தமது கூட்டத்தாரை தவிர மற்ற முஸ்லிம்கள் அனைவரையும் முஷ்ரிக்குகள் என்றும் , அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரைக்    கொல்வது நன்மையான காரியம் என்றும் தீர்ப்பளித்தார் என்கிறார் கலீல் அஹ்மத் அம்பேட்டி "

[ நூல் - அத்தல்பீஸாத் ,பக்கம் 13 . அல் முஹன்னத் ,பக்கம் 18-19 ]  

"அன்பானவர்களே ! பதினோராம் நூற்றாண்டின் துவக்கத்தில் அரேபிய மண்ணில் நஜ்துப் பகுதியில்  தோன்றிய முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் பாத்திலான ( பொய்யான ) கொள்கையுடையவராகும் . அதனால் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரோடு போர் புரிந்து பல்லாயிரக்கணக்கானோரை கொன்று குவித்தார் .  அத்துடன் ஸுன்னத் வல் ஜமாத்தினரை கொல்வது நன்மையான ஒன்றென்றும் சொன்னார் . அவர்களின் சொத்துக்களை சூறையாடினார் . அவர்களால் எழுதப்பட்ட நூற்களை எரித்து சாம்பலாக்கினார் . இஸ்லாமிய முன்னோடிகளை கடுமையாக எரித்தார் . இவருடைய அநியாயத்தையும் ,அழிச்சாட்டியதையும் தாங்க முடியாமல் மக்கா மற்றும் மதீனாவை சேர்ந்தவர்கள் எல்லாம் தமது சொந்த இடங்களை விட்டும் வெளியேறி ஓடினர் . இவர் ஒரு படுபாவியும் , அநியாயக்காரருமாகும் என்கிறார் ஹுசைன் அஹ்மத் டாண்டவி என்பார் ".

[ நூல்  - அஷ்ஷிஹாபுத்   தாகிப் ,பக்கம் 42 ]

"அவர்கள் தம்மை தாமே ஹன்பலி மத்ஹபை பின்பற்றுபவர் என்று கூறிக் கொண்டாலும் உண்மை அதுவல்ல . அவர்கள் தமது கொள்கைக்கு புறம்பான கொள்கை கொண்டோரை முஷ்ரிக்கீன்கள் என்றே கருதினர் என்னும் அல்லாமா ஷாமியின் கருத்தை பிரதிபலிக்கின்றார் முஹம்மத் தானவி "

[ நூல் - ஹாஷியா  நஸாயி ஷரீப் ] 

"முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் பிரார்த்தனை செய்யும் போது  அல்லாஹ்விடம் இன்னார் பொருட்டால் எனக் கேட்போர் அனைவரும் காபிரும் ,முஷ்ரிக்கும் என்று சொன்னார் . காரணமில்லாமல் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரை கொன்று குவித்தார் என்கிறார் உபைதுல்லாஹ் சிந்தீ "

[ நூல் - ஷாஹ் வலியுல்லாஹ் அவ்ர் உன்கீ ஸியாசத்தீ  தஹ்ரீக் , பக்கம் 228 ,229,230 ] 

முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபை பற்றி கருத்து சொன்ன மேற்கண்ட தேவ்பந்திய உலமாக்களும் வஹ்ஹாபிகள் தான் . இந்த தேவ்பந்தியர்கள் மற்ற இயக்கங்களுக்கு புறம்பாக நான்கு மத்ஹபுகளில் ஒன்றை பின்பற்றுபவர்களாக இருப்பதுதான் இவர்களுக்கும் மற்ற இயக்கங்களுக்கும்   உள்ள வித்தியாசம் . இருப்பினும் இவர்களெல்லாம் ஷைகு நஜ்தி தொடர்பாக கூறிய கருத்துக்களில் நமக்கு ஒரு மாபெரும் பிரயோஜனம் இருக்கின்றது .

அது என்னவெனில்   முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் பாத்திலான - பொய்யான கொள்கையை கொண்டவர் . அவரை ஆதரிக்காதோரை முஷ்ரிக் -அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர் என்று வாதிட்டவர் . நல்லாடியார்களான    ஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரை கொன்று குவித்தார்  என அவர்களே கூறியிருக்கும் ஒப்புதல் வாக்குமூலம் தான் . ஆதலால் அவரைப் பற்றிய தகவல்களை இப்பொது பார்ப்போம் .

இவருடைய முழுப்பெயர் பற்றி மஹமூத் ஷுக்ரி என்பார் தமது தாரீக் நஜ்த் (அரபி)  என்னும் நூலின் 111ஆம் பக்கத்தில் ,.....

முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் இப்னு சுலைமான் இப்னு அலி இப்னு முஹம்மத் இப்னு அலி இப்னு ராஷித் இப்னு புரைத் இப்னு முஹம்மத் இப்னு புரைத் இப்னு முஷ்ரிப் இப்னு உமர் இப்னு புஃழாத் இப்னு ரீஸ் இப்னு சாகிர் இப்னு முஹம்மத் இப்னு அலி இப்னு உஹைப் அத் தமீமி அந்நஜ்தி    என்று கூறுகிறார் .

அடுத்து அவருடைய பிறப்பின் ஆண்டு தொடர்பாக அல்லாமா ஸைனீ தஹ்லான் மக்கீ رضي الله عنه அவர்கள்   ஹிஜ்ரி 1111 ஆம் ஆண்டு எனக் குறிப்பிட்ட போதிலும் ஹிஜ்ரி 1115ஆம் ஆண்டு(கி.பி. 1703)  தான் பிறந்ததாக நஜ்த்துவாசிகள் கூறுகின்றனர் . அவரைக் கொண்டு அறிமுகப்படுத்தப் பட்ட கொள்கையை பின்பற்றுவோரையே வஹாபிகள் என்று அழைக்கப்படுகின்றது . இனி இது பற்றியும் கருத்து வேறுபாடு இருப்பதால் அவருடைய கொள்கையை சரிகண்ட  அலி தன்தாவி  ஜெளஹரி என்பார் , முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்னும் தனது நூலில் ,13ஆம் பக்கத்தில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் ....



  "முஹம்மத் என்று பெயருடையவரைத் தான் வஹாபிகள் எனச் சொல்லப்படுகின்றது " என்று கூறுகிறார் .

அடுத்து ஷைகு நஜ்தி பிறந்த காலத்தின் நிலை குறித்தும் அவர் இஸ்லாத்திற்கு புதியதோர் விளக்கத்தை தந்தற்குரிய காரணம் என்னவென்பதைக் குறித்தும் இந்தியாவைச் சேர்ந்த மஸ்வூத் ஆலிம் என்பார் கூறும் கருத்தை சுருக்கமாக சொல்வதாயின் ...........

 "உலகமனைத்திலும் உள்ள இஸ்லாமியர்கள் எல்லாம் கப்ருகளை வணங்குபவர்களாகவும் , முஷ்ரிக்கீன்களாகவும் மடமைக் காலத்தில் இருந்ததாகவும் கூறுகிறார் . இதற்கு அவருடைய ஊரோ அல்லது பக்கத்திலிருந்த ஊரோ விதிவிலக்காக இருந்ததில்லை என்றும் , ஏனெனில் ; அவரது சொந்த ஊரான உயைனாவுக்கு பக்கத்திலிருந்த ஜபீலா என்னும் ஊரில் வாழ்ந்த ஹழ்ரத் ஸெய்யிதினா உமர்   رضي الله عنه அவர்களது மைந்தரான ஹழ்ரத் ஸைத்   رضي الله عنه அவர்களது கப்ரை அங்கிருந்தோர் வணங்கிக் கொண்டிருந்ததாகவும் , அதேபோல் தர்இய்யாவிலும் பல குப்பாக்களை நபித்தோழர்களுடையதென்று சொல்லிக் கொண்டு அவைகளை கண்ணியப்படுத்திக் கொண்டிருந்தனர் என்றும் , கபீரா என்னும் ஊரில் ஹழ்ரத் ழிரார் இப்னு  அசூர்  رضي الله عنه அவர்கள் என்னும் நபித்தோழருடைய குப்பா வழிகேட்டின் அடித்தளமாக இருந்ததாகவும் , பழீலத்துள் பிதா என்னும் ஊரில் பழமை வாய்ந்த ஒரு மரத்தடியில் அன்றிருந்த ஆண்களும் ,பெண்களும் இணைந்து சொல்லமுடியாத அனாச்சரங்களை எல்லாம் செய்பவர்களாக காணப்பட்டனர் "என்று கூறும் 
 மஸ்வூத் ஆலிம் அவரது பெற்றோர் பற்றி சொல்லும் பொது அதே நூலின் 17 வது பக்கத்தில் .....

" உயைனா என்னும் ஊரில் பேரறிஞர்களின் குடும்ப வாரிசாக கி.பி  1703 ஆம் ஆண்டு ஹிஜ்ரி 1115ல் பிறந்தார் . இவருடைய தந்தை அப்துல் வஹ்ஹாப் அந்த ஊரின் காழியாக இருந்தார் . அப்போது அவ்வூரின் தலைவராக அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு ஹம்த் இப்னு அப்துல்லாஹ் இப்னு மஃமர் என்பவர்     இருந்து வந்தார் .

இவருடைய பெரிய தந்தையான ஷைகு சுலைமான் என்பவர் அக்காலத்திய பிரபல அறிஞராக இருந்தார் . பல நூற்களையும் இயற்றினார் . சிறிய தந்தையான இப்ராஹீம் என்பவரும் ,அவருடைய மைந்தரான அப்துர் ரஹ்மான் என்பவரும் , அவருடன் பிறந்த சகோதரன் சுலைமான் என்பவரும் பிரசித்தி பெற்ற மாபெரும் அறிஞர்களாக விளங்கியதுடன் அவர்களெல்லாம் தனிப்பட்ட ஓர் மத்ஹபை பின்பற்றுபவர்களாகவும் ,அந்த   மத்ஹபின் சட்டப்படியே தீர்ப்புகள் வழங்கக் கூடியவர்களாகவும் இருந்தனர் .

அறிஞர்களின் வாரிசாக பிறந்ததால் ஷைகு நஜ்தியையும் அறிவாளியாக்குவதற்கு வேண்டி தனது தந்தையிடமே கல்வி கற்றார் . மேற்படிப்புக்காக தூர தேசங்களுக்கு சென்றது பற்றியோ அல்லது அங்கே ஆண்டுக்கணக்கில் கல்வி பயின்றதற்கோ ஆதாரங்கள் இல்லை . இருப்பினும் தனது 10வது வயதில் முழு குரானையும் மனனம் செய்து விட்டார் . அதன்பின் 12ஆம் வயதில் திருமணமும் செய்து வைக்கப்பட்டார் .

இந்த இடத்தில நாம் கண்டிப்பாக ஒன்றை சொல்லியே ஆக வேண்டும் . அதாவது அவர் பிறந்து மார்க்கத்திற்கு புதியதோர் விளக்கத்தை சொல்லும் வரை சுமார் 400 வருடங்களாக வாழ்ந்து வந்த உலகமனைத்திலும் உள்ள இஸ்லாமியர்கள் எல்லாம் வழிகேட்டில் மூழ்கி கிடந்ததாக சொல்லும் போது , ஷைகு நஜ்தியின் தந்தை , பெரிய தந்தை ,சிறிய தந்தை ,சகோதரர் போன்றவர்கள் மட்டும் எப்படி பேரறிஞர்களாக இருந்தார்கள் ? எல்லோருமே முஷ்ரிக்குகளாக இருந்தார்கள்  என்றால்     இவருடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டும் எப்படி ஏகத்துவாதிகளாக இருக்க முடியும் ? என்பதுதான் .

பின்னும் பாராளும் பயகம்பர் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்களுக்கும் ஹழ்ரத் ஸெய்யிதினா ஈஸா عليه السلام  அவர்களுக்கும் இடைப்பட்ட காலம் 570 ஆண்டுகள் மட்டுமே . இந்த இடைப்பட்ட காலத்தில்  வாழ்ந்தவர்களில் சிலர் அல்லாஹ்வைப் பற்றிய அறிவை தமக்குள் கொண்டிருந்தனர் . இருப்பினும் அவர்கள் மவுனிகளாகத்தான் இருந்து வந்ததாக வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது . 

ஒரு பேச்சுக்கு ஷைகு நஜ்தியுடைய குடும்பத்தார் மட்டுமே அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டிருந்தார்கள் என்று நாமாக கருதிக் கொண்டாலும் அவர்கள் நீதவான்களாக இருந்தார்களென்றும் ,ஹன்பலி மத்ஹபின் பிரகாரம் தீர்ப்பு வழங்கி வந்தார்களென்றும் எப்படி சொல்ல முடியும் ?

அல்லாஹ்விற்கு இணை வைப்பவர்களாக , கப்ருகளுக்கு தலை வணங்குபவர்களாக இருந்து கொண்டிருந்தவர்களுக்கு தனிப்பட்ட ஒரு மத்ஹபின் பிரகாரம் எப்படி தீர்ப்பு சொல்ல முடியும் ? அத்துடன் வஹாபிய கொள்கைப்படி மத்ஹபுகளெல்லாம் வழிகேடு என்று இருக்கும்போது இவர்கள் ஒரு மத்ஹபை எப்படி பின்தொடர்ந்து இருக்க முடியும் ? 

அவ்வாறின்றி ஷைகு நஜ்தியுடைய தந்தை மற்றும் சகோதர்கள் போன்றோர்கள் இவருக்கு பின்புதான் சத்தியத்தை உணர்ந்தார்களென்று வைத்துக் கொண்டால் அவர்கள் இவருடைய கொள்கைகளுக்கு ஊக்கமளித்திருக்க வேண்டும் . குறைந்த பட்சம் ,அவருக்கு பக்க பலமாகவாது இருந்திருக்க வேண்டுமல்லவா ? 

இந்நிலையில் உறுதுணையாகவும் ,பக்க பலமாகவும் இருக்க வேண்டிய அவருடைய தந்தையும் ,சகோதரரும் அவரை எதிர்த்தாகவும் , அவருடைய நவீன கொள்கைகளை கண்டித்து நூற்கள் இயற்றியதாகவும் ,அவர் ஒரு வழிகேடராக மாறுவதற்குரிய சாத்தியக் கூறுகள் இருப்பதால் அவரோடு யாரும் சகவாசம் வைத்துக்  கொள்ளக் கூடாது என்று ஜனங்களை பகிரங்கமாக ஏச்சரித்தது ஏன் ? 

இதில் அவருடைய சகோதரர் பின்னால் மன்னிப்பு கேட்டதாகவும் , அண்ணனுடன் சேர்ந்து கொண்டதாகவும்  நஜ்திகள் ஏன் கூறுகின்றனர் ?  அதிலும் குறிப்பாக சகோதரர் சுலைமான் அவர்களால் அண்ணன் வழிகேடன் , பித்தலாட்டக்காரன் ,பொய்யன் என்றெல்லாம் எச்சரிக்கை செய்து தொகுக்கப்பட்ட நூல் இன்னும் இருக்கின்றதே ?

இனி சுலைமான் தனது அண்ணனுடன் சேர்ந்து கொண்டார் எனில் அதற்குரிய வாக்குமூலத்தை கொண்ட எழுத்துப் பிரதியை இந்த வஹாபிகள் காட்ட வேண்டாமா ? உலகில் விலை கொடுத்து வாங்க முடியாத பொருள் ஒன்று இருக்குமாயின் அது தாயும் ,தந்தையும் தானென்று நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம் . ஆனால் அதையும் இவர்கள் விலைக்கு வாங்கி விடுவார்கள் என்பது நமக்கு நன்றாகவே தெரியும் . 


Tuesday, 23 July 2019

ஷைகு நஜ்தி முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்

இவர் நஜ்த் மாகாணத்தில் தன்னை நபியென வாதிட்ட முஸைலமா பிறந்த ஊரான உயைனாவில் தான் பிறந்தார் . இந்த ஊர் தற்போது ரியாதில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது . இதைத்தான் ...


" இறுதிக்காலத்தில் முஸைலமாவின் ஊரில் இருந்து ஒருவன் தோன்றுவான் . அவன் இஸ்லாத்தை மாற்றி அமைப்பான் என்பதாக அருமை நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின்  பொன்னான வாக்கு தெளிவுபடுத்துகின்றது  "

இன்னும் ...


"முழரின் பிள்ளைகளில் இல்யாஸும் ஒருவர் . இல்யாஸின் குடும்பத்தார் முத்ரிகா ,தாபிகா என இரு கிளைகளாக பிரிந்தனர் . இவர்களில் தாபிகாவின் வழித்தோன்றலே ஷைகு நஜ்தியாகும் "

[ நூல் - முதீருள் வஜ்த் ஃபீ அன்பாசி முலூகி நஜ்த் , பக்கம் 10 ]

இன்னோரிடத்தில் ...



"நஜ்தில் இருக்கும் பனு தமீம்கள் மூன்று குடும்பங்களில் உள்ளடங்குவர் . அதிலொன்று 'ஹன்ழலா' வாகும் . அக்கோத்திரத்தை சார்ந்தவர்கள் தான்  அப்துல்   வஹ்ஹாபின் அங்கத்தினர்களாகும் . அவர்கள் தான் ரியாத்திலுள்ள முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் குடும்பத்தினராகும் "

[ நூல் - ஹாஷியா முதீரில் வஜித் , பக்கம் 32 ]

ஷைத்தானின் கொம்பாகத் திகழ்ந்த முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ,நாயகம்   صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் அமுத வாக்கிற்கிணங்க  முழர் குடும்பத்தைச் சார்ந்தவராக இருப்பதுடன் , துல்குவைஸராவின் கோத்திரமான பனு தமீமையும் சேர்ந்தவராக இருக்கிறார் . முழருடைய குடும்பத்தில் ,பனு தமீமுடைய கிளையில் ,நஜ்த் மாகாணத்தில் ,உயைனாஎன்னும் ஊரில் தோன்றிய அனைவருமே கொடியவர்கள் , ஷைத்தானுடைய கொம்புகள் என்று சொல்வது தவறாகும் . காரணம் அவர்களில் நல்லவர்களும் இருக்கலாம் . இதற்கு ஆதாரமாக அடுத்து வரும் ஹதீதை எடுத்துக் கொள்ளலாம் . அதாவது ....


"ஈராக்கிலுள்ள நல்லவர்கள் ஷாமுக்கும் ,ஷாமிலுள்ள தீயவர்கள் ஈராக்கிற்கும் சென்றடையாத வரை இறுதிநாள் தோன்றாது என்கிறார்கள் ஏந்தல் நபி  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் "

எனவே எல்லா இடத்திலும் ,எல்லா வம்சத்திலும் நல்லவர்களும் இருப்பர் . தீயவர்களும் இருப்பர் என்பதால் இப்போது நாம் பனு தமீம் பற்றியும் ,துல்குவைஸரா பற்றியும் பார்ப்போம் . 


" பனு தமீமுடைய கிளையைச் சார்ந்தோரில் சிலர்  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களது  திருச்சபைக்கு வருகை தந்த போது நபியவர்கள் அவர்களை நோக்கி , ' பனு தமீம்களே ! உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்  ' என்றனர் . அதற்கு அவர்கள் ,( ஏற்கனவே)   எங்களுக்கு சுபச் செய்தி சொல்லி விட்டீர்களாதலால் இப்போது (பணம் ) கொடுங்கள் என்றனர் . அதுகேட்ட நபியவர்கள் திருவதனம் சினத்தால் மாறிப் போய் விட்டது . அப்போது எமன் தேசத்தை சார்ந்தவர்கள் சிலர் அங்கே வருகை தந்தனர் . அவர்களிடம் நபியவர்கள் , எனது சுபச் செய்தியை பனு தமீம்கள் ஏற்கவில்லை ,நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல ,அதற்கவர்கள்;நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என்றனர் ".

[  நூல் - புஹாரி ஷரீப் , அறிவிப்பாளர் : ஹழ்ரத் இம்ரான் இப்னு ஹுசைன்  رضي الله عنه அவர்கள் , பாகம் -3,பக்கம் 262 . நஸாயி ,திர்மிதி ,கிதாபுல் மனாகிப் . இப்னு ஹிப்பான் , பாகம் 9 , பக்கம் 202 ] 

இன்னும் ...


 " ஹபீபே ! உங்களுடைய அறையின் வெளிப்பக்கமிருந்து உங்களை அழைப்பவர்களில் பெரும்பாலானோர் அறிவிலிகளாக இருக்கின்றனர் "
[ அல் குர்ஆன் ] 

 இவ்வசனமானது , திங்களெம் கோமான் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள்  தமது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ள போது நபியவர்களின் வீட்டு வெளிப்பக்கமிருந்து சிலர் நபியவர்களின் திருப்பெயரைச் சொல்லி அழைத்த பொழுது அவர்களது விஷயத்தில் இவ்வசனம் இறக்கப்பட்டது . 

[ நூல் - நூருல் யகீன் பீ ஸீரத்தி ஸையிதில் முர்சலீன் , பக்கம் 247 , அஸ் சீறதுன் நபவிய்யா பாகம் 2,பக்கம் 314 ] 

அவர்களை அறிவீனர்கள் என்பதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான் . அவர்கள் தான் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் உடைய முன்னோர்களான பனு தமீம்களாகும் . ஆம் ,அல்லாஹ்வால் அறிவீனர்கள் என்று பேசப்பட்ட கூட்டத்தை சார்ந்த இந்த ஷெய்கு நஜ்தியை தான் ஷிர்க்கையும் ,பித்அத்தையும் அழித்தொழித்து ஏகத்துவத்தை புதுப்பிக்க வந்த புரட்சியாளர் என்கிறது ஒரு கூட்டம் .

ஆனால் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் எனச் சொல்லப்படும் நல்லடியார்களைத் தவிர உள்ள ஏனைய எல்லா சிறு சிறு கூட்டங்களுமே ஷைகு நஜ்தியின் சகாக்களாக இருப்பதை பார்த்துக் கொண்டே,   என்ன காரணத்திற்காக  இப்படிச் சொல்கின்றனர் என்பதுதான் நமக்கு புரியாத புதிராகும் . 


Thursday, 18 July 2019

ஷைத்தானின் தோற்றம்


                                     al-Fajr al-sadiq

அருமை நாயகம் முஹம்மத் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் ,எங்களுடைய ஷாமுக்கும் ,எமனுக்கு பரக்கத்துச் செய்வாயாக என்று அல்லாஹ்வை பிரார்த்தித்த பொழுது ஒருவர் ,எங்களுடைய நஜ்துக்கும் என்று சொல்ல ,  அதற்கு நபியவர்கள் ....



" அங்கே குழப்பங்களும் ,சச்சரவுகளும் இருக்கின்றன . இன்னும் அங்கிருந்து தான் ஷைத்தானின் கொம்பு வெளியாகும் என்று சொன்னார்கள் "

இன்னும் ....



" நஜ்திலிருந்து தான் ஷைத்தான் வெளிப்படுவான் . அவனுடைய பிரச்சனையால் மத்திய கிழக்கு பகுதி அதிர்ச்சியுறும் என்றும் நாயகம் 
صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் சொன்னார்கள் ".

[ நூல் - அல் ஃபஜ்ருஸ் ஸாதிக் ]  



இந்த ஹதீதுக்கு நாம் விளக்கம் அளிக்கும் முன்பாக நஜ்தில் காணப்பட்ட பிரச்னைகள் குறித்தும் , அந்த நஜ்த் என்பது அரபு மாகாணத்தில் உள்ள , இன்று ரியாத் என்று பெயர் மாற்றம் செய்யப்டுள்ள பகுதி என்பதையும் ஆதாரப்படுத்தினோம் . இப்போது அந்த நஜ்த் என்னும் பகுதியில் இருந்து வெளியான ஷைத்தான் யார் என்பதை உங்களின் பார்வைக்கு தருகிறோம் .

"ஷைத்தானின் கொம்பு " எனப் பேசுகின்ற ஹதீதுகள் சிலவற்றில் 'ஒரு கொம்பு ' என்றும் ,இன்னும் சிலவற்றில் ' இரு கொம்பு ' என்றும் பேசப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம் . அத்துடன் அவ்விரு ஷைத்தானின் கொம்பும் (சக்தியும் ) நஜ்தில் வாழ்ந்த முழர் மற்றும் ரபீஆவுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தாம் என்பதையும் அந்த ஹதீதுகள் தெளிவுபடுத்தியதையும் நீங்கள் கவனித்திருக்கலாம் .அனால் அவ்விருவரில் முதல் நபர் யார் தெரியுமா ??? அவன் தான் ...

                       முஸைலமத்துல்  கத்தாப்   (الكذّاب)

என்போனாகும் . இவன் நஜ்த் மாகாணத்தில் உயைனா என்னும் ஊரில் பிறந்தான் . இவன் முழர் குடும்பத்தைச் சார்ந்தவன் . இவன் தன்னை நபியென வாதிட்டான் . இவனை எதிர்த்து நடைபெற்ற யுத்தத்தில் பெரும்பான்மையான ஸஹாபா பெருமக்கள் ஷஹீதாகிப் போயினர் . இறுதியில் இவனுடைய பிரச்னை வேரோடு கிள்ளியெறியப்பட்டது .

அத்துடன் இவனுடைய பிரச்சனை அருமை நாயகம்  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் இப்பூமியில்  தமது வெளிரங்கமான பஷரியத்துடைய  வாழ்க்கை வாழ்ந்த காலத்திலேயே தோன்றிய ஒன்றாகும் . இதில் நஜ்த் என்பது ஈராக்கிலுள்ள ஒரு பகுதி என வாதிப்போர் ,முஸைலமா எங்கே பிறந்தான் ? இவனுக்கும் நபித்தோழர்களுக்கும்  இடையே நடைபெற்ற யுத்தம் எங்கே நடைபெற்றது என்பதை தெளிவுபடுத்தட்டும்  .

மேலும் முஸைலமத்துல்  கத்தாப் உடைய வெளிப்பாட்டைஅஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின்  முன்னோடிகள் ஷைத்தானின் ஒரு கொம்பு என்று கூறியதை பெரிய மனதோடு ஏற்றுக் கொண்டதோடு, இவனுடைய பிரச்சனை நபியவர்களின் காலத்திலேயே ஏற்பட்ட ஒன்றாக இருப்பதாலும் ,நபிமொழியில் சொல்லப்பட்ட பகுதியில் இருந்து மட்டுமல்ல , சொல்லப்பட்ட குடும்பத்திலிருந்தே தோன்றிய இவனல்லாத இரு கொம்புகள் யார் என்று பார்ப்போம் .

நபிமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தோன்றப்போகும் அவ்விரு கொம்பும் ரபீஆ மற்றும் முழர் ஆகிய இரு குடும்பங்களிலிருந்து தான் தோன்ற வேண்டும் . அதாவது ஒரு கொம்பு ரபீஆவின் கோத்திரத்தைச் சேர்ந்ததாகவும் ,இன்னொரு கொம்பு முழர் கோத்திரத்தை சேர்ந்ததாகவும் இருக்க வேண்டும் .

ஆனால் முதல் கொம்பாயுள்ள முஸைலமாவும் ,இரண்டாவது கொம்பான ஷைகு நஜ்தி ஆகிய இருவருமே முழருடைய கோத்திரத்தை சேர்ந்தவர்களாகவே இருப்பதால் , இரு குடும்பத்தைச் சேர்ந்த அவ்விரு கொம்புகள் யார் என்று பார்ப்போம் . இவ்வகையில் தோன்றிய முதல் கொம்பு யார் தெரியமா ???  

Wednesday, 17 July 2019

நஜ்தும் அதன் பொருளும் - 4

1. பனு அஸத் பின் குஸைமா  

இவர்கள் முழருடைய கோத்திரத்தாராகும் . இவர்கள் நஜ்துப் பிரதேசத்தில் குடியிருந்தனர் . ஹிஜ்ரி 19ல் இவர்கள் கூபாவை சென்றடைந்தனர் . சண்டையும் ,சச்சரவும் இவர்களின் குணமாகும் . இக்கோத்திரத்தில் இருந்து தான் தன்னை நபியென பிரச்சாரம் செய்த "துலைஹா இப்னு  குவைலித் "என்பவன் தோன்றினான் . 

2.   பனு தமீம் இப்னு முர்ரா 

இவர்களும் முழர்ரின் கிளையாகும் . நஜ்தில் தான் குடியிருந்தனர் . ஹிஜ்ரி 66ல் கூபாவில் நபியென்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டிருந்த முக்தார் ஸகபியுடன்  ஒன்று சேர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக யுத்தம் செய்தனர் . இன்னும் இதே கோத்திரத்தில் இருந்துதான் துல் குவைஸரா பிறந்தான் . இதே போல் நஜ்திய மத்ஹபின் ஸ்தாபகரான நஜ்த் உடைய  ஷெய்கும்  (முஹம்மது பின் அப்துல் வஹாப் ) இதே கோத்திரத்தை சார்ந்தவர் தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒன்றாகும் .


3. பனு தைம் அர்ரபாப் 

இவர்களும் முழர்ரின் கிளையாராகும் . இக்கிளையைச் சார்ந்த கூபாவின் பிரதிநிதியான ராஷித் என்பவன் தான் ஹழ்ரத் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் رضي الله عنه அவர்களை கொலை செய்வதற்காக அப்துர் ரஹ்மான் பின் முல்ஜிம் என்பவனை உருவாக்கியவனாகும் .

  
4. பனு ஸகீஃப்    

இவர்களும் முழர்ரின் கிளையாராகும் .இவர்கள் தாயிப் நகரில் வாழ்ந்தனர் . அதன்பின் கூபாவை சென்றடைந்தனர் .


5. பனு குஃபாஜா 

இவர்களும்    முழர்ரின் கிளையை சார்ந்தவர்களே . இவர்கள் நஜ்தில் வாழ்ந்தனர் .


6. பனு ஸுலைம் பின் மன்ஸுர் 

முழர்ரின் கிளையார் . நஜ்தில் வாழ்ந்தனர் .


7. பனு ஆமிர் இப்னு ஸஃஸஆ    

முழர்ரின் கிளையார் . நஜ்தில் வாழ்ந்தனர் .


8. பனு கத்பான் இப்னு சஃத்   

முழர்ரின் கிளையார் . நஜ்த் வாசிகள் .


9. பனு ஃபஸாரா இப்னு ஸப்யான்   

முழர்ரின் கிளையார் . நஜ்திலும் , வாதியுல் குராவிலும் வாழ்ந்தனர் . கைபர் யுத்தத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக யூதர்களுக்கு உதவி செய்தவர்கள் . அப்துர் ரஹ்மான் ஃபஸாரி இதே கிளையைச் சார்ந்தவன் .


10 .  பனு பக்ர் பின் வாயில் 

ரபீஆவின் கிளையார் . இன்றைய சவூதி அரேபியாவின் ஸ்தாபகர் சவூத் குடும்பத்தினர் இக்கிளையைச் சார்ந்தவர்களாகும் . 


11. பனு தங்லப் பின் வாயில்   

ரபீஆவின் கிளையார் . நஜ்த் வாசிகள் .


12. பனு ஷைபா பின் ஸஃலபா 

ரபீஆவின் கிளையைச் சார்ந்த பக்ர் பின் வாயிலின் குடும்பத்தினராகும் . இக்குடும்பத்தில் தான் க்வாரிஜிய்யீன்களின் முக்கிஸ்தர்கள் தோன்றினர் . நஜ்தில் வாழ்ந்தனர் .

13.அல் பதீகாத் 

அபூ பித்யக் அப்துல்லாஹ் இப்னு தெளர் இப்னு கைஸ் இப்னு ஸஃலபாவின் பிள்ளைகளாகும் . ஷைத்தானின் கொம்பு வெளிப்பட்ட நஜ்தில் வாழ்ந்தவர்கள் .

[ நூல்  - பித்னத்தேன் கா சர்சமீன் ,பக்கம் 88 ]  

அன்புக்குரிய வாசகர்களே ! இதுவரை மேற்கூறப்பட்ட ரபீஆ மற்றும் முழர் கோத்திரத்தார் இன்று இப்னு சவுதின் ஆட்சியின்  கீழிருக்கும்  நஜ்த் என்னும் ரியாத்தில் தான் வாழ்ந்து வந்தனர் . அன்று இஸ்லாமியர்களுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்துக்கும் இவர்கள் தான் காரண கர்த்தாக்களாகும் . பின்னர் காலப்போக்கில் இஸ்லாம் எங்கெல்லாம் பரவியதோ அங்கெல்லாம் இவர்கள் சென்று குழப்பத்தையும் ,பிரச்சனைகளையும் ஏற்படுத்தினர் . 

இவ்வகையில் இவர்கள் ஈராக்கில் உள்ள கூபா ,பஸ்ரா போன்ற பகுதிகளுக்குச் சென்று குடியேறி பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கினர் . எனவே ஈராக்கில் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்திற்கும் இந்த நஜ்திகள் தான் காரணமாகும் . எதார்த்தமான இந்த உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டு ரபீஆ மற்றும் முழருடைய கோத்திரத்தார் ஈராக்கில் தான் வாழ்ந்ததாகவும் ,நபியவர்களால் சொல்லப்பட்ட நஜ்த் ஈராக் தான் என்று பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் .

இனி எதிர் தரப்பார் தமது கூற்றுக்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் விஷயங்களில் அடுத்து வருபவை மிக மிக முக்கியமானதாகும் . அதாவது அவர்களது கருத்துக்கு உயிர் நாடியைப்  போன்றதாகும் . இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவெனில் இவர்களால் பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகளைக் கொண்டுள்ள  நூல்களென்று இவர்களாலேயே புறக்கணிக்கப்படுகின்ற நூல்களிலிருந்து அதற்குரிய ஆதாரத்தை நமக்கு எடுத்துக் காட்டுவதேயாகும் . அதையும் உங்களின் பார்வைக்கு தருகின்றோம் .....


     
 "யா அல்லாஹ் ! எங்களுடைய கொடுக்கல் வாங்கலில் பறக்கத்து செய்வாயாக    என்பதாக மூன்றுமுறை நபியவர்கள் பிரார்த்தித்தார்கள் . அப்போது ஒருவர் ,எங்களுடைய ஈராக்கிற்கு பிரார்த்தியுங்கள் என்று சொல்ல ,அங்கே குழப்பங்களும் ,பிரச்சனைகளும் இருப்பதாகவும் ,அங்கிருந்து தான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என்றும் அருமை நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் சொன்னார்கள் ". 

[ நூல்  - ஹுல்யத்துல் அவ்லியா ,அறிவிப்பாளர் -  ஹழ்ரத் செய்யிதினா உமர் رضي الله عنه அவர்கள் , பாகம் 6, பக்கம் -133 ] 




 " அண்ணலெம் பெருமான்   صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள்  எங்களின் மக்கா ,எங்களின் மதீனா , எங்களின் கொடுக்கல் வாங்கல் ,எங்களின் ஷாம் ,எங்களின் எமன் ஆகியவைகளுக்கு அருள் புரியுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள் . அப்போது ஒருவர் ,அல்லாஹ்வின் ரஸுலே ! எங்களின் ஈராக்கிற்கும்  பிரார்த்தியுங்கள் என்றார் . அதற்கு அங்கு பிரச்னைகளும் குழப்பங்களும் இருக்கிறது . இன்னும் ஷைத்தானின் கொம்பும் அங்கிருந்து தான் உதயமாகும் என்றார்கள் ". 

[ நூல்  - ஹுல்யத்துல் அவ்லியா , அறிவிப்பாளர் -  ஹழ்ரத் செய்யிதினா உமர் رضي الله عنه அவர்கள் , பாகம் 6, பக்கம் -133 ] 




"சுபுஹுத் தொழுகையை நிறைவேற்றிய பின் நாயகம்  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் அங்கு குழுமியிருந்தவர்களை முன்னோக்கியவர்களாக ,யா அல்லாஹ் ! எங்களது மதீனாவிலும் ,எங்களது கொடுக்கல் ,வாங்கலிலும் இன்னும் எங்கள் ஷாமுக்கும் ,எமனுக்கு பரக்கத் செய்வாயாக என்று பிரார்த்தித்தார்கள் .அப்போது ஒருவர் ,எங்களது ஈராக்கிற்கும் பிரார்த்தியுங்கள் என்று சொல்ல ,அதற்கு அங்கிருந்து தான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும் , பிரச்சனைகள் ஏற்படும் என்றார்கள் ".

[ நூல் - மஜ்மவுஸ் ஸவாயித் , அறிவிப்பாளர் - ஹழ்ரத் ஸெய்யிதினா இப்னு உமர் رضي الله عنه அவர்கள் ,பாகம் 3 ,பக்கம் 305 ]  



"யா அல்லாஹ் ! எங்களது ஷாமுக்கும் ,எங்களது எமனுக்கும் பரக்கத் செய்வாயாக என்று பிரார்த்தனை செய்த் பொழுது ,அங்கிருந்தோரில் ஒருவர், யா ரஸூலல்லாஹ் ! எங்களது ஈராக்கிற்கும் பிரார்த்தியுங்கள் என்று சொல்ல , அதற்கு அங்கிருந்து தான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என்றும் ,குழப்பங்கள் வெடிக்கும் என்றும் ஏந்தல் நபி 
صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள்  சொன்னர்கள்   "

[ நூல் - மஜ்மவுஸ் ஸவாயித் , அறிவிப்பாளர் - ஹழ்ரத் ஸெய்யிதினா இப்னு அப்பாஸ்  رضي الله عنه அவர்கள் ,பாகம் 3 ,பக்கம் 305 ]  



"ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் இப்னு கத்தாப் رضي الله عنه அவர்கள் ஈராக் நாட்டுக்கு செல்ல தயாரான பொழுது , ஹழ்ரத் ஸெய்யிதினா கஃபுல் அஹ்பார் رضي الله عنه அவர்கள் ,அமீருல் முஃமினீன் ! ஈராக்கிற்கு செல்லாதீர்கள் . நிச்சயமாக அங்கே பத்தில் ஒன்பது    சதவீதம் சூனியம் இருக்கின்றது . அதுமட்டுமின்றி ஜின்கள் இருப்பதாகவும் , மார்க்கத்திற்கு அழிவு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ள தகவல் என்னை வந்து எட்டியுள்ளது என்றார்கள் "

[ நூல் - முவத்தா ,இமாம் மாலிக் رضي الله عنه அவர்கள் ] 


"ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் رضي الله عنه அவர்களின் புதல்வர் ஈராக் வாசிகளை நோக்கி ,நான் உங்களிடம் சிறு விஷயங்களை குறித்து கேட்கவில்லை . நீங்கள் பெரும் பெரும் விஷயங்களை எல்லாம் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள் . ஆதலால் அருமை நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள்   தங்கள் முபாரக்கான திருக்கரத்தால் கிழக்கு திசை பக்கமாக சைக்கினை செய்து ஷைத்தானின் இரு கொம்புகள் வெளியாவதைக் கொண்டு அங்கிருந்து தான் குழப்பங்கள் உருவாகும் என்று சொன்ன தகவலை நான் எனது தந்தை சொல்லக் கேட்டேன் என்கிறார்கள் " .

[ நூல்  -முஸ்லிம் ஷரீப் ,கிதாபுல் பிதன், இக்மால் ,8-447 , பத்ஹுல் பாரி ,பாகம் 13,பக்கம் 50 ]

மேற்கண்ட ஆறு ஹதீதுகளும் எதிர்தரப்பாரால் தமது கூற்றுக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படுபவைகளாகும் . இவற்றில் இரண்டு ஹதீதுகள் ஹுல்யத்துல் அவ்லியாவில் இருந்தும் , இரண்டு ஹதீதுகள்மஜ்மவுஸ் ஸவாயிதில் இருந்தும் , ஒன்று முவத்தாவில் இருந்தும் , ஒன்று முஸ்லிம் ஷரீபில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளது .

இவைகளில் குறைந்தபட்சம் பலவீனமான படித்தரமுள்ள அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்படும் ஹதீதையே ஏற்றுக் கொள்ள மறுக்கும் இவர்கள் ,இங்கே எடுத்துக் காட்டப்பட்டுள்ள ஆறு ஹதீதுகளிலும் ஒரு ஹதீதைத் தவிர மற்ற ஹதீதுகள் அனைத்தும் எந்த மாதிரியான படித்தரமுள்ளவை என்பதை வஹாபிகளிடமே கேட்டு தெரிந்து கொள்ளட்டும் . இனி அந்த ஒரு ஹதீதுக்குரிய விளக்கமும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினருக்கு சாதகமான ஒன்றே அன்றி அவர்களுக்கு சாதகமானதல்ல .

யாருக்கு சாதகமாக இருந்தால் என்ன ? அவைகளுக்கான விளக்கமென்ன ? என்று நம்மவர்கள் கேட்கலாம் . ஆதலால் சொல்லப்போகும் விளக்கம் சுருக்கமாக இருந்தாலும் அதை ஆழமாக சிந்திக்குமாறு வேண்டுகிறோம் . அதாவது புஹாரி ,திர்மிதி , முஸ்னத் அஹ்மத் போன்ற நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஸஹீஹான ஹதீதுகளில்  ,எங்களுடைய நஜ்த்துக்கும் ,எங்களுடைய கிழக்குப் பகுதிக்கும் பிரார்த்தியுங்கள் என்று கேட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது . காரணம்  அன்று அப்புனித சபையில் நஜ்த்தைச் சார்ந்த தோழர்களும் இருந்ததே அதற்குரிய சான்றாகும் .

அதுமட்டுமின்றி நஜ்துவாசிகளால் நாயகம்  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களுக்கும் ,அவர்களது தோழர் பெருமக்களுக்கும் , பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டதால்    அவைகளை எல்லாம் கருத்தில் கொண்டு நபியவர்கள் பிரார்த்திக்காமல் விட்டுவிட்டனர் .
ஆனால் அப்பகுதியைச் சார்ந்தவர்கள் அவைகளையெல்லாம் தெரிந்து கொண்டே தங்களது பகுதியும் நபியவர்களின் பிரார்த்தனைக்கு வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் ஒருமுறை கேட்கிறார்கள் . அதற்கு நபியவர்கள் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார்கள் . இரண்டாவது முறையாகவும் கேட்கிறார்கள் . அதற்கும் நபியவர்கள் ஒன்றும் சொல்லவில்லை . 

அத்தோடு அத்தோழர்கள் பேசாமல் இருந்திருந்தால் நஜ்த் என்னும் அப்பகுதி இத்தகைய இழிநிலைக்கு தள்ளப்பட்டிருக்காது . அதைத்தான் அருளின் முழு வடிவான நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களும் விரும்பி இருந்திருக்கிறார்கள் . அதே நேரம் கேட்பதைக் கொடுக்கக் கூடிய வல்லமையுள்ளவர்களும் , இல்லதையென்று சொல்லாதவர்களாக நபியவர்கள் இருந்ததால் அத்தோழர்களும் நபியவர்கள் நடந்ததை எல்லாம் மறந்து விட்டு நமக்காக பிரார்த்திக்காமலா போய் விடுவார்கள் என்னும் ஆதங்கத்தில் ஒன்றுக்கு மூன்று முறை கேட்ட போதுதான்  நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களும் நஜ்த் உடைய எதார்த்த நிலையை அத்தோழர்களுக்கு எடுத்துக் காட்டினார்கள் .

அதற்கு மாறாக அப்புனித சபையில் ஈராக் சம்பதமாகச் சொல்லப்படுவதற்குரிய சூழலோ , அல்லது அது சம்பந்தமாக பேசுவதற்கு உரிய ஆட்களோ யாரும் இருக்கவில்லை .  அத்துடன் ஈராக்கை சேர்ந்தவர்கள் யாரும் அதுவரை இஸ்லாத்தை தழுவியதற்கு ஆதாரங்கள் இல்லாத பொழுது ,நபியவர்களிடம் ஈராக்கிற்காக பிரார்த்தியுங்கள் என்று கேட்பதற்குரிய சாத்தியம் அறவே இல்லையாதலால் இது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது .இனி சந்தேகத்திற்குரிய நிலையில் ,சந்தேகத்திற்குரிய ஒன்றை ஆதாரமாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும் ?

இது ஒருபுறமிருக்க ! தற்போதுள்ள நஜ்திகள் மேற்கண்ட ஹதீதுகளில் கூறப்பட்டுள்ள நஜ்த் என்னும் வாக்கியத்தை அந்த இடத்திலிருந்து அகற்றிவிட்டு ,அதற்கு பதிலாக ஈராக் என்னும் வாக்கியத்தை நுழைத்திருக்கலாம் அல்லவா ? ஏனெனில் இதற்கு ஏராளமான ஆதாரங்களும் இருக்கின்றனவாதலால் .மேற்கண்ட ஹதீதுகளில் முதல் நான்கு ஹதீதுகளும் ஆதாரமாகக் கொள்ளப் படுவதற்க்குரிய தகுதி வாய்ந்தவை அல்ல . 

இனி கஃபுல் அஹ்பார் رضي الله عنه அவர்கள் ஹழ்ரத் உமர் رضي الله عنه அவர்களை ஈராக்கிற்கு செல்ல வேண்டாமென சொல்லப்பட்ட ஹதீது , முவத்தாவின் பார்வையில் முர்ஸலானதும் , முஸ்னத் அப்துர் ரஸ்ஸாகின் பார்வையில் முன்கதிவுமாகும் .

இது ஒருபுறமிருக்க இங்கு பேசப்படும் கருத்துக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் இந்த ஹதீது இருப்பதை நாம் காணலாம் . அதற்கு மாறாக சம்பந்தப்படுத்தி முனைவோமாயின் ஹழ்ரத் உமர் இப்னு கத்தாப்  رضي الله عنه அவர்கள் செல்லாத ஒரு பகுதிக்கு தமது தோழர்களை அனுப்புவதற்கு அவர்கள் எப்படி முயற்சித்திருக்க முடியும் ? அது மட்டுமா ! ஈராக் நாட்டை இஸ்லாமிய நாடாக மாற்றி அமைகின்ற விஷயத்தில் கலீபா அவர்கள் எந்தளவுக்கு ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள் என்பதை அடுத்து வரும் சம்பவத்தை கொண்டு நாம் தெரிந்து கொள்ள முடியும் .அச்சம்பவமானது  ...

" ஹமதான் என்னும் பகுதியைச் சார்ந்த 1000 பேர் ஷாமுக்கு ஹிஜ்ரத் செய்யும் எண்ணத்தில் மதீனா முனவ்வராவை வந்தடைந்தனர் .அப்போது ஹழ்ரத் உமர்  رضي الله عنه அவர்கள் , அவர்களனைவரையும் ஈராக்கிற்கு அனுப்ப எடுத்துக் கொண்ட முயற்சியில் இரத்தம் சிந்த வேண்டிய கட்டம் கூட ஏற்பட்டது . இதில் கலீபா அவர்களின் தலையில் இருந்து இரத்தம் வழிவதைக் கண்ட பொது தான் அவர்கள் ஈராக்கிற்கு செல்ல தயாரானார்கள் ."

[ நூல் - முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் ]

மேலும் ஈராக்கில் சூனியம் மலிந்து காணப்பட்டத்தைப் போல ஜின்களின் சாகசங்களும் ஒருகாலத்தில் அங்கே நிறைந்து காணப்பட்டது வாஸ்தவம் தான் . அதன்றி பல்வேறு வகையான பிரச்சனைகளும் அங்கே தலை தூக்கியது உண்மைதான் . இருப்பினும் அவையனைத்தும் காலப்போக்கில் அழிந்து போய் விட்டதோடு அதன்பின் அது விலாயத்தின் சிகராமக திகழத் தொடங்கிவிட்டது .

அதன்றி புண்ணிய பூமியாகவும் , விலாயத்தின் தலைமை பீடமாகவும் விளங்கிக் கொண்டுள்ள ஈராக்கை உலகத்தின் குழப்பத்திற்குரிய பகுதியென சொல்லிக் கொண்டிருப்பவர்கள் தான் காலங்காலமாக இஸ்லாத்தை அழித்தொழிப்பதற்கு திட்டமிட்ட நஜ்துடைய   ஷைகின் சகாக்கள் என்பதையும் நாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றோம் .

இனி நாம் இவ்வாறு சொல்வதை கட்டுக்கதை என்று மறுக்கப்படுமாயின் ,சவூதி பிரகடனப்பட்ட பொழுது அல்லாஹ்வின் ஆலயம் அமைந்துள்ள புனித மக்காவை அல்லது அல்லாஹ்வின் அருமை தூதரான ஈருலக இரட்சகர் நாயகம்  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் மதீனா முனவ்வராவை தலைநகரமாக ஆக்காமல் அல்லாஹ் ,றஸுலுடைய சாபத்திற்கு இலக்கான நஜ்தை பெயர் மாற்றம் செய்து தலைநகராக ஆக்கியது ஏன் ? பதில் தொடர்கிறது .

இதுவரை வல்லோனாகிய அல்லாஹ்வின் பேரருளாலும் , எமது நாதாக்களின் நல்லாசியாலும் அண்ணல் நபியவர்களின் ஹதீதில் சுட்டிக் காட்டப்பட்ட நஜ்த் என்பது இப்புமியிலுள்ள எந்தப் பகுதி ? அது எங்கேயுள்ளது ? அங்கே தோன்றிய பிரச்னைகள் என்ன ? அது எக்காரணம் கொண்டு ஈராக்கை சேர்ந்த பகுதியல்ல என்பதை தகுந்த ஆதாரங்களைக் கொண்டு உங்களின் பார்வைக்கு வைத்தோம் . 

இப்போது அந்த ஹதீதில் சுட்டிக்காட்டப்பட்ட "ஷைத்தானின் கொம்பு " என்பது எது என்பதற்குரிய விளக்கத்திற்காக நமது எழுது கோலை முன்னை விடு கூர்மையாக்கிக் கொண்டு முனைப்போடு சொல்லத் துவங்கின்றோம் . 






Wednesday, 10 July 2019

நஜ்தும் அதன் பொருளும் - 3


 " அருமை நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் எமன் தேசத்தை நோக்கியவர்களாக யா அல்லாஹ் ! இவர்களுடைய உள்ளங்களை என் பக்கமாக ஆக்குவாயாக என்று பிரார்த்தித்தார்கள் . அதன்பின் ஈராக் மற்றும் ஷாம் பக்கம் திரும்பி அவ்வாறே பிரார்த்தித்தார்கள். இன்னும் எங்களுடைய கொடுக்கல் வாங்களிலும் பரக்கத் செய்வாயாக என்று பிரார்த்தித்தார்கள் . "

[ நூல் - மஜ்மவுஸ் ஸவாயித் , பாகம் 3,பக்கம் 304 . முஸ்னத் அஹ்மத் ,பாகம் 5,பக்கம் 135 .அதபுல் முப்ரத் ,இமாம் புஹாரி .கன்சூல் உம்மால் ]   



" ஷாம் தேசத்தின் பக்கமாக பார்த்த அருமை நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் யா அல்லாஹ் ! அவர்களுடைய உள்ளங்களை உன்னை வழிபடுவதற்குரிய உள்ளங்களாக ஆக்குவாயாக . இன்னும் அவர்களை சூழ இருப்பவர்களையும் உனது அருளைக் கொண்டு சூழ்ந்து கொள்வாயாக என்று பிரார்த்தித்தார்கள் . பின்னர் எமன் தேசத்தின் பக்கமாகவும் ,ஈராக் தேசத்தின் பக்கமாகவும் திரும்பி அது போன்றே பிரார்த்தித்தார்கள் . "

[ நூல் - முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் ] 

மேற்கண்ட இரு நபிமொழிகளிலும் நபியவர்கள் ஷாம் தேசத்திற்காகவும் , எமன் தேசத்திற்காகவும் பிரார்த்தித்த பொழுது தெளிவாக ஈராக் தேசத்திற்காகவும் குறிப்பிட்டு பிரார்த்தனை செய்திருக்கிறார்கள் . 

அதன்பின் ஷாமுக்காகவும் ,எமனுக்காகவும் பிரார்த்தித்த பொழுது நாயகமே ! எங்கள் நஜ்த்துக்காகவும் பிரார்த்தியுங்கள் என்று கேட்க ,அதற்கு நபியவர்கள் பிரார்த்தனை செய்யாமல் போனதோடு அங்கிருந்து தான் பிரசச்னைகளும் ,ஷைத்தானின் கொம்பும் உதயமாகும் என்று சொல்லப்பட்ட தகவல் ஈராக்கைத் தான் சாரும் என்று குறிப்பிடுவது அறிவிலித்தனம் இல்லையா ?

இனி ஈராக் நாட்டிலுள்ள கூபா பற்றிய சில ஹதீதுகளை பார்ப்போம் .

கூபாவில் பிறந்தவர்கள் தான் இமாமுல் அஃலம் இமாம் அபூ ஹனீபா 
رحمه الله அவர்கள்  .  இந்த நகரம் அமீருல் முஃமீனின் ஸெய்யிதினா உமர் 
رضي الله عنه  அவர்களின் கட்டளையின்    பேரில் ஹழ்ரத் செய்யிதினா ஸஃத் இப்னு அபீவக்காஸ்   رضي الله عنه  அவர்களால் பாதுகாக்கப்பட்ட நகரமாகும் .

இந்நகரில் கிட்டத்தட்ட 1500 நபிமணித் தோழர் பெருமக்கள் இன்றும் தன் மண்ணறையில் பெருமையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் . லட்சோப லட்சம் மக்கள் இப்போதும் அந்நல்லோரின் கப்ருகளை தரிசித்துக் கொண்டிருக்கின்றார்கள் . இவர்களில் 70 பேர் பத்ருடைய ஸஹாபாக்களும் 300 பேர் பைஅத்துர் ரிழ்வானில் கலந்து கொண்டவர்களும் ஆவர் .

அமீருல் முஃமீனின் ஸெய்யிதினா உமர் பாரூக் رضي الله عنه  அவர்கள் 
ரஃஸுல் இஸ்லாம் ,   ரஃஸுல் அரப் , ஜும்ஜுமதுல் அரப் , ரும்ஹுலல்லாஹ் , கன்சூல் ஈமான் எனவும் ஹழ்ரத்   ஸெய்யிதினா ஸஃத் இப்னு அபீவக்காஸ்   رضي الله عنه  அவர்களால் கன்ஸுல் ஈமான் , ஸைபுல்லாஹ் , ரும்ஹுல் இஸ்லாம் எனவும் புகழ்ந்து பேசப்பட்ட நகரமாகும் .

இன்னும் அமீருல் முஃமீனின் ஸெய்யிதினா அலீ  كرم الله وجهه அவர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட நகரமாகும் . இந்நகரம் பற்றி ஹதீதின் அமீருல் 
முஃமீனின் என்று புகழப்பட்ட இமாம் புஹாரி رضي الله عنه  அவர்கள் ,...

" நான் ஹதீதுக் கலையை கற்பதற்காக இருமுறை மிஸ்ருக்கும் , இருமுறை ஷாமுக்கும் ,இருமுறை ஜஸாயிருக்கும் பயணம் செய்த நான் ,நான்கு ஆண்டுகள் ஹிஜாஸிலும் வாழ்ந்திருக்கின்றேன் . ஆனால் கூபாவுக்கும் ,பகுதாதுக்கும் கணக்கிட முடியாத அளவுக்கு பயணம் செய்திருக்கின்றேன் என்று கூறுகின்றனர் ".

[ நூல் - ஹத்யுஸ் ஸாரி ,பக்கம் 478 ] 

இவ்வாறே கூபாவில் வாழ்ந்த ஸெய்யிதினா இப்னு மஸ்வூத்  رضي الله عنه  அவர்களின் சபையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வர் . ஒரு முறை தன்னை வரவேற்க    வந்த கூட்டத்தை கண்ட அமீருல் முஃமீனின் ஸெய்யிதினா அலீ  كرم الله وجهه அவர்கள் இப்னு 
மஸ்வூதே ! உம்மால் இந்நகரம் அறிவின் சிகரமாகி விட்டதென்று சொன்னார்கள் .

காத்தமுன் நபியவர்களின் கண்மணித் தோழர் பெருமக்களில் ஆறு பேர் நீதிபதிகளாக திகழ்ந்தனர் .  அதில் ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் பாரூக் , ஹழ்ரத் ஸெய்யிதினா உபை இப்னு கஃப் , ஹழ்ரத் ஸெய்யிதினா ஸைத்  رضي الله عنهم   ஆகியோர் மதீனா முனவ்வராவிலும் ,  ஹழ்ரத் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் , ஹழ்ரத் ஸெய்யிதினா அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் , ஹழ்ரத் ஸெய்யிதினா அபூ மூஸா அல் அஷ்அரி رضي الله عنهم ஆகியோர் கூபாவிலும் மிளிர்ந்தனர் என்கிறார்கள் ஹழ்ரத் ஷாஃபி رضي الله عنه அவர்கள் .

" இவ்வாறே ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் பாரூக் ,  ஹழ்ரத் ஸெய்யிதினா இப்னு மஸ்வூத் , ஹழ்ரத் ஸெய்யிதினா ஸைத் , ஹழ்ரத் ஸெய்யிதினா உபை இப்னு  கஃப் ,ஹழ்ரத் ஸெய்யிதினா அபூதர்தா ,   ஹழ்ரத் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் ஆகிய அறுவரையும் நபித்தோழர்களில் கல்வியின் ஊற்றுக் கண்ணாக கண்டேன் . 

பின்னர் அவ்வூற்றுகள் ஹழ்ரத் ஸெய்யிதினா  அலீ இப்னு அபீதாலிப்  , ஹழ்ரத் ஸெய்யிதினா இப்னு மஸ்வூத்  ஆகிய இருவரிடமும் ஒன்று சேர்ந்தது . அவ்விருவரின் கல்வியானது மதீனா முனவ்வராவிலிருந்து பெருக்கெடுத்து கூபாவில் மழையாகப் பொழிந்தது . அவ்விருவரின் பொருட்டால் கூபா முழுவதும் கல்வியால் பிரகாசித்தது என்கின்றனர் இமாம் மஸ்ரூக்  رضي الله عنه அவர்கள் . "

[ நூல்  -பித்னதேன் கா   சர்சமீன் ] 

 அதற்கு மாறாக அந்த நபிமொழிக்கொப்ப நஜ்தை நாம் கணக்கில் கொண்டால் அங்கிருந்து அல்லாஹ்வின் விரோதியான இப்லீஸ் தான் காலத்திற்கேற்ப வெவ்வேறு வகையான உருவகங்களில் தோற்றமெடுத்தானே தவிர இஸ்லாத்தின் மகத்துவத்தை சுட்டிக் காட்டக்கூடிய எந்தவொரு நிகழ்ச்சியும் அங்கே நிகழ்ந்ததாக நமக்கு தெரியவில்லை . அதன்றி அப்பகுதியில் சில பெரியார்களின் கப்ருகள் இருந்தாலும் அவைகளையும் அங்குள்ளோர் உடைத்து தரைமட்டமாக்கி அவர்களின் சாபத்தையும் அவர்கள் தேடிக் கொண்டனர் .

அடுத்து அருமை நாயகம்  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் எமனுக்காகவும் ,ஷாமுக்காகவும் பிரார்த்தித்த பொழுது ஈராக்குக்காகவும் பிரார்தித்துள்ளனர் என்பதும் , ஈராக் தேசம் அல்லாஹ்வின் நேசர்கள் நிறைந்து காணப்படும் அருளுக்குரிய புண்ணிய பூமி என்பதும் தெளிவாக தெரிந்து கொள்ளப்பட்ட ஒன்றாக இருப்பதால் ,இதற்கு மேலும் நபியவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட நஜ்த் என்பது ஈராக் தான் என்று சொல்வீர்களாயின் அது சிலந்தி வீடு கட்டிய கதையாகத்தான் முடியும் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள் . 

அத்துடன்  வஹாபிய சிந்தனாவாதிகளின் இன்னொரு வாதத்தையும் உங்களின் மேலான விளக்கத்திற்கு தருகின்றோம் . ஏனெனில் அப்போதுதான் நீங்கள் எளிதாக இப்பிரச்சனையை விளங்கி கொள்ள முடியும் .

"எங்களுடைய நஜ்துக்கும் "  என்னும் வாக்கியத்தை கொண்ட ஹதீதானது புஹாரி மற்றும் திர்மிதியில் பதிவாகியுள்ள ஒன்றாகும் .இதேபோல் முஸ்னத் அஹ்மதின் 5986 என்னும் இலக்கத்தில் பதிவாகி இருந்தாலும் , 5642 என்னும் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீதில் "நஜ்தினா " என்னும் வாக்கியத்திற்குப் பதிலாக "வஃபீ மஷ்ரிகினா "எங்களின் கிழக்குப் பகுதிக்காகவும் என்று கேட்கப்பட்டதாகவும் பதிவாகியுள்ளது .

எமன் என்றும் ஷாம் என்றும் இடங்களின் பெயரைச் சொல்லி நாயகம் 
صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள்  பிரார்த்தித்த பொழுது நஜ்த் என்னும் இடத்தின் பெயரைச் சொன்ன தோழர்கள் இச்சந்தர்ப்பத்தில் மஷ்ரிக் என்பதாக திசையை குறித்து சொல்லியிருப்பதை நாம் கவனிக்க வேண்டும் . ஏனெனில் மதீனா முனவ்வராவிலிருந்து பலமுறை நபியவர்கள் கிழக்குத் திசையை சுட்டிக் காட்டி எச்சரிக்கை செய்தவை அனைத்துமே நஜ்தைக்  குறித்துதான் சொல்லப்பட்டதென்பதை அத்தோழர்களின் வார்த்தை நமக்கு தெளிவாக்குகின்றது .

ஆம் .புண்ணிய பூமியான மதீனா முனவ்வராவின் நேர் கிழக்கே நஜ்த் தான் இடம் பெற்றுள்ளது . ஆனால் ஈராக் ஷிமால் -மேற்குப் பக்கமாக சாய்ந்து கிழக்கை நோக்கி அமைந்துள்ளது . அது மட்டுமின்றி எந்தெந்த இடங்களிலெல்லாம் நின்று அருமை நபியவர்கள் கிழக்குத் திசையை சுட்டிக் காட்டினார்களோ அவைகலையெல்லாம் நமது    ஆய்வுக்கு உட்படுத்துவோமாயின் அது நஜ்தை நோக்கித்தான் திரும்புகின்றது .

இவை அனைத்தையும் விட மஷ்ரிக் என திசையை சுட்டிக் காட்டி சொன்னது நஜ்தை   நோக்கித்தான் என்பதை அதே புஹாரி ,முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீதுகளே ஆதாரப்படுத்துவதை இங்கே பாருங்கள் .



 " இங்கிருந்து தான் பிரச்சனைகள் உண்டாகும் என்று கிழக்குப் பிரதேசத்தை சுட்டிக்காட்டிய அருமை நாயகம்  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் 
ஷைத்தானுடைய இரு கொம்புகளும் ரபீஆ மற்றும் முழருடைய இரு வம்சத்திலிருந்தே தோன்றும் எனக் கூறிய நபியவர்கள், அவ்விரு குடும்பத்தினர்களும்  ஒட்டகம் மற்றும் மாடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோரிடம் காணப்படும் வன்நெஞ்சமும் ,  வெறுப்புணர்வும் உடையவர்களாக இருப்பார்கள் என்றும் கூறினார்கள்  "  

[ நூல்  - புஹாரி ஷரீப் , கிதாபு பத்யில் கல்கி ] 

புனித மார்க்கமான இஸ்லாத்தில் முஸ்லிம்களிடையே கருத்து மோதல்களும் , ஷைத்தானின் கொம்பும் இன்று சவூதி அரேபியாவின் தலைநகரமாகத் திகழும் ரியாத் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நஜ்த்லிருந்து தான் தோன்றியது என்பதை மேற்கண்ட புஹாரி ,முஸ்லிமின் ஹதீதுகள் நமக்கு மிக அழகாக விளக்கி காட்டி விட்டது . 

எப்படியென்று கேட்கிறீர்களா ? ஷைத்தானுடைய கொம்பும் , குழப்பங்களும் கிழக்குத் திசையில் ரபீஆ மற்றும் முழருடைய குடும்பத்திலிருந்து தான் வெளியாகும் எனக் கூறப்பட்டதல்லவா !அவ்விரு குடும்பத்தாரும் நஜ்த்வாசிகள் தான் .ஆதலால் நாம் இப்போது அவ்விரு குடும்பங்கள் தொடர்பாக ,அவர்கள் எங்கிருந்தார்கள் ? அதன்பின் அவர்கள் எங்கு சென்றார்கள் ? என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம் .