Wednesday, 15 April 2020

இலங்கையில் வஹாபியிசம் - 2

தப்லீக் ஜமாத் இயக்கத்திற்கு எதிராக அதன் உண்மை நிலைகளை தெளிவுபடுத்த தொகுக்கப்பட்ட தமிழ் நூற்கள் இன்றும்கூட பாதுகாப்பாக இருக்கின்றன . நலன் விரும்பிகள் அவைகளை மறுபிரசுரம் செய்து சத்தியத்தை பாதுகாக்க முன் வரலாம் . இன்னும் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கையை முழுக்க முழுக்க ஆதரிக்கும் உலமாக்கள் மற்றும் பாமரர்கள் ,படித்தவர்கள் போன்றோர் அவ்வியக்கத்தில் சேர்ந்து அவர்களை நாம் திருத்தலாம் என்று நினைப்பார்களாயின் அவர்களின் எண்ணம் கானல் நீராகத்தான் முடியும்.

அத்துடன் அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களும் தவறான வழியில் செல்வதற்கு இவர்களே காரணமாகி விடக்கூடாது . அத்துடன் இவ்வியக்கம் வஹாபிகளின் இயக்கமல்ல என்பதை நிரூபிக்க குரல் கொடுப்போர் மேற்கண்ட ஆதாரங்கள் குறித்து என்ன பதில் தருவார்கள் என்பதை தெளிவுபடுத்துவதோடு ,அவர்கள் உலமாக்களால் அப்போது கூறப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் கருத்துக்களுக்கு விளக்கம் தருவதே இப்போது போதுமானதாகும் . புதிதாக ஏதும் விளக்கம் தர தேவையில்லை என்று நினைக்கின்றோம் .நாம் அக்கருத்துக்கள் அனைத்தையும் வன்மையாக எதிர்ப்பவர்கள் . பின்னும் ஸுன்னத் வல் ஜமாத்தினர் தான் சத்தியத்தில் நிலைத்து நிற்கும் கொள்கைவாதிகள் .


அல்லாஹ்வின் நல்லடியார்களே ! அருமை நாயகம் அவர்களின் நேசர்களே ! மனிதனாகப் பிறந்தவர்கள் அனைவரும் அல்லாஹ்வால் கட்டளையிடப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவது அவர்களின் மீது கட்டாயமான கடமையாகும் .இதில் மாறு செய்பவன் தண்டிக்கப்படுவான் . அதேநேரம் அவனை மன்னிப்பது அல்லாஹ்வின் விருப்பத்தை பொறுத்தது . இதில் இறையாணையை நிறைவேற்றியவனுக்கு அவன் சன்மானம் வழங்கி சிறப்பிக்கின்றான் . அதேநேரம் அவனால் நிகழ்த்தப்படும் வணக்கங்கள் அவனை சுவர்கத்துக்கு அழைத்துச் செல்லாது . இன்னும் ஒரு மனிதனின் வெளிப்படையான வணக்க வழிபாட்டை கவனத்தில் கொண்டு அவனை சுவர்க்கவாதி என்று கூற யாருக்கும் உரிமை கிடையாது .


மாறாக சுவர்க்கம் செல்லுதல் என்பதெல்லாம் அல்லாஹ்வின் பேருபகாரத்தைக் கொண்டுதான் . இன்னும் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை கொண்டுதான் ஒருவன் சுவர்க்கம் செல்ல முடியும் என்னும் நபிமொழி நமக்கு கூறும் ஒரு மிகப்பெரும் யதார்த்தமான விஷயம் என்னவென்றால் யாரை நமது நபிகள் நாயகம் صلى الله عليه وآله   அவர்கள் பொருந்திக் கொண்டார்களோ அவர்தான் சுவர்க்கம் செல்லமுடியும் என்பதேயாகும் . மேலும் நமது நாயகம் صلى الله عليه وآله  அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத் என்பது அல்லாஹ்வின் வாக்காகும் .

ஆதலால் ஒரு மனிதனுடைய வணக்கம் , உடல் அமைப்பு , ஆடை , மொழிவன்மை   போன்றவைகளை கவனித்து நாம் ஏமாளிகளாகிவிடக்கூடாது . இதை நிரூபிக்க வரலாற்றின் உண்மை சம்பவம் ஒன்றை உங்களின் பார்வைக்கு தருகின்றோம் . படித்துப் பயன்பெறுங்கள் .

ஹிஜ்ரி 511ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் 11ஆம்  நாள் ஞாயிற்றுக்கிழமை சூரியோதய நேரத்தில் ஹலப் என்னும் ஊரில் பிறந்து ஹிஜ்ரி 580ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் 11ஆம் நாள் புதன்கிழமையன்று இறையடி சேர்ந்த திமிஷ்க்கில் நல்லடக்கம் செய்யப்பட்டவர் அல் ஆதில் நூருத்தீன் மஹ்மூத்   பின் ஸங்கீ ஷஹீத் என்னும் அரசராகும் .

இப்பெரியாரின் கப்ரை பற்றி இமாம் இப்னு கதீர் رحمه الله அவர்கள் ,இவருடைய கப்ரு தரிசிக்கப்படுவதாகவும், தரிசிப்போர் அங்கிருந்து பரக்கத்தை பெற்றுச் செல்வதாகவும்   கூறுகின்றார்கள் . இன்னும் இமாம் தஹபி رحمه الله அவர்களும் மக்கள் இப்பெரியாரை ஸியாரத்துச் செய்வதாக கூறுகின்றனர் . இப்பெரியாரின் கனவில் ஒருநாள் இரவு கண்மணி நாயகம் صلى الله عليه وآله அவர்கள் மூன்றுமுறை தோன்றி இரு நபர்களை சுட்டிக்காட்டி அவ்விருவரும் தனக்கு தீங்கு விளைவிப்பதாக கூறினார்கள் . கனவைக் கண்ட அன்றிரவே தமக்கு நெருங்கிய அமைச்சர் ஜமாலுத்தீன் என்பாரை அழைத்து நடந்ததைக் கூறி விஷயத்தை மறைத்து வைக்குமாறும் , உடனே மதீனா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கூற , ஏற்பாடு செய்யப்பட்டு இருபது சிப்பாய்களோடு பதினாறு நாட்களில் மதீனா வந்து சேர்ந்தனர் .

இதில் நாயகம் صلى الله عليه وآله அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட அவ்விருவரையும் கண்டுகொள்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை . இந்நிலையில் அங்கே மக்ரிப் - மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த இருவர் மட்டும் வரவில்லை  என்றும் அவ்விருவரும் யாரிடத்திலும் எதையும் பெறுவதில்லை என்றும் மாறாக அவர்கள் மக்களுக்கு வாரி வழங்கு தனவந்தர்கள் என்றும் அரசருக்குச் சொல்லப்பட்டது .மேலும் ...


" அவ்விருவரும் சதா நோன்பு நோற்பதாகவும் , ரவ்ழா ஷரீஃபில் தொழுகையை நிறைவேற்றுவதாகவும் , அதிகமதிகம் நாயகம் صلى الله عليه وآله அவர்களின்  ரவ்ழா ஷரீபை ஸியாரத்துச் செய்வதாகவும் ,தினந்தோறும் அதிகாலையில் ஜன்னத்துல் பகீயை தரிசிப்பதாகவும் ,சனிக்கிழமை தோறும் மஸ்ஜிதுல் குபாவை தரிசிப்பதாகவும் ,கேட்போருக்கெல்லாம் இல்லை என்று சொல்லாது வாரி வாரி வழங்குவதாகவும் அவர்களைப் பற்றி மக்கள் புகழந்து பேசினர் " .

அதுகேட்ட அரசர் அவ்விருவரையும் பார்க்க வேண்டுமென்று சொல்ல அவ்விருவரும் வருகை தந்தனர் . கனவில் காட்டித்தரப்பட்டவர்கள் இவர்கள் தான் என்று அரசர் கண்டுகொண்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்குச் சென்று பார்த்தபொழுது அங்கே அதிகமான பணமும் வேறு சில பொருட்களும் தான் இருந்ததேயன்றி வித்தியாசமான எதுவும் இல்லாததால் அரசர் தனியாக வீட்டைச் சுற்றி பார்த்தபொழுது அங்கே விரிக்கப்பட்ட பாய் ஒன்றை உயர்த்திப் பார்த்தபொழுது ...


"அருமை நாயகம் صلى الله عليه وآله அவர்களின் புனிதமிகு ரவ்ழா ஷரீஃபிற்கு சென்று சேரும் சுரங்கப் பாதையொன்று தோண்டப்பட்டிருப்பதைக் கண்ட அனைவரும் திகைத்துப் போயினர் "

உடனடியாக அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர் . அதன்பின் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே  அவர்கள் தாங்கள் கிறிஸ்தவர்களால் அனுப்பப்ட்டவர்கள் என்றும் தாங்களும் கிறிஸ்தவர்கள் என்பதையும் ஒப்புக் கொண்டனர் . இதன்பின் அவ்விருவரும் கொல்லப்பட்டனர் . அதற்குப்பின் ரவ்ழா ஷரீபை சுற்றி ஈயத்தினால் ஆன வெலி உள்ளே போடப்பட்டது .

சகோதரர்களே ,பார்த்தீர்களா ! அல்லாஹ்வுடைய ரஸூலின் விரோதிகள் எந்த வேஷத்தில் செயல்பட்டுள்ளனர் என்பதை கவனித்தீர்களா ? 900  ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் அனைவராலும் கண்டு கொள்ளமுடியாமல் போயிருக்கும்போது இப்போது உங்களால் அவர்களை கண்டுபிடிக்க முடியுமா ?

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரைத் தவிர அனைத்து இஸ்லாமிய பெயர் தாங்கி இயக்கங்களும் இஸ்லாத்தின் விரோதிகள் தாம் . ஆதலால் அவர்களின் சகவாசம் உங்களுக்கு வேண்டாம் . இன்னும் அவர்கள் தம்மையும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் தாம் என்று எனப் பிரச்சாரம் செய்து கொண்டாலும் , வஹாபிஸம் வழிகேடு என்பதை அவர்கள் உணர்ந்தும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் ,صلى الله عليه وآله அவர்களின்  ரவ்ழா ஷரீபையும் ,மஸ்ஜிதுன் நபவியையும் பிரிக்க வேண்டும் ;மஸ்ஜிதுந் நபவிக்குள் கப்ரு இருப்பது வழிகெடுக்குரிய செயல் என்று சொல்லும் தரங்கெட்ட கொள்கைவாதிகளே !

தனது திருவுடலை திருட வந்தவர்கள் பற்றி முன்னறிவிப்புச் செய்த நபியவர்கள் , அம்மன்னனிடம் ; மக்கள் தனது கப்ரை பள்ளிக்குள் வைத்துள்ளனர் ,கப்ரு இருக்கும் பள்ளிவாசலில் தொழக் கூடாது , ஆதலால் எனது கப்ரையும் ,பள்ளியையும் தனித்தனியாக பிரித்து விடுங்களென்று ஏன் சொல்லாமல் விட்டு விட்டார்கள் ?   அதுசரி ! மனிதர்களாக இருந்தார்களென்றால் அல்லவா இவர்கள் சிந்திப்பார்கள் !

பின்னும் நாயகம் صلى الله عليه وآله அவர்களால் பள்ளிவாயிலில்  தொழுது கொண்டிருந்த ஒருவனை கொலை செய்யுமாறு தனது தோழர்களுக்கு கட்டளையிட்டார்களே நபியவர்கள் ! அக்கொடியோனின் வாரிசுகள் இவர்கள் . ஆதலால் வெளித்தோற்றத்தை கண்டு ஏமாந்து விடவேண்டாமென்று எச்சரிக்கின்றோம் .

மேலும் பள்ளியின் உட்பகுதியில் (தொழுவோருக்கு இடைஞ்சல் ஏற்படும் வண்ணம் ஹராமான முறையில் ) புத்தகம் வாசிக்கும் பழக்கம் என்பது முதன் முதலில் கி.பி.1806 - ஹிஜ்ரி 1221ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் 7ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்றுதான் மக்கா முகர்ராமாவில் ஹரம் ஷரீபில் வைத்து நஜ்திய வஹாபிய புத்தகத்தை வாசிப்பதன் மூலமாக முதன் முதலாக துவக்கி வைக்கப்பட்டது . இதைப் பின்பற்றித்தான் பள்ளியின் உட்பகுதியில் புத்தகம் வாசிக்கும் வழக்கத்தை முகல்லிதுகள் ஏற்படுத்தினர் .



No comments:

Post a Comment