Wednesday, 11 March 2020

இலங்கையில் வஹாபியிசம் - 1

இனி இலங்கை நாட்டில் தோன்றிய வஹாபிய கூட்டம் பற்றி நமது பார்வையை இப்பொது திருப்புவோம் . 1951 ஆம் ஆண்டு கல்முனையில் வைத்து மாநாடு ஒன்று நடைபெற்றது . அந்த மாநாட்டை பற்றி ( இரு வழிக்கு ஒரு வழித் தேர்வு ) என்று பத்வா ஒன்று கொடுக்கப்பட்டு அது அன்று பிரசுரமாக வெளியிடப்பட்டது . அதன்பின் அப்பிரசுரம் 28/09/1997 ல் நீர்க்கொழும்பில் பலஹத்துறையில் வைத்து நடைபெற்ற அகில இலங்கை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் மஜ்லிஸுல் உலமா சபையின் ஏழாவது ஆண்டு நிறைவு விழாவில் எளிய தமிழ் நடையில் 'திரை கிழிந்தது , வஹாபிகள் தப்பி ஓட்டம் ' என்னும் பெயரில் மறுபிரசுரம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது .

மேலும் அம்மாநாட்டில் நீதிபதியாக அன்று நியமிக்கப்பட்டவர்  அஸ்ஸகுமுல்  காரி ஃபீ  ஐனிஸ் ஜிந்தீகில் ஃபாஸிக் - பாவியாகிய வழிகேடரின் கண்ணை துளைக்கும் அம்பு என்னும் பெயரால் ஒரு நூலை அச்சிட்டிருந்தார் . அவர்தான் வெலிகம மத்ரஸதுல் கிழ்ரியா அரபிக் கல்லூரியின் அதிபரான மவ்லானா ஏ.எச்.ஏ.எம்   ஆலிம் அவர்கள் . இன்னும் அப்பிரசுரம் பல உலமாக்களால் சரிகாணப்பட்டு அவர்களுடைய கையெழுத்தோடு கொழும்பு வீரகேசரி அச்சகத்தில் ஜனாப் எம்.கே.ஏ மஹமூத் லெப்பை என்பாரின் முயற்சியால் 1951 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது .  அந்த பத்வாவில் கையொப்பமிட்டிருந்தவர்களின் பெயர்கள் பின்வருமாறு ....

1 . மவ்லவி எஸ்.யு.எம்.ஹிபதுல் கரீம் ஆலிம் பாகவி - தலைவர், ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு .

2. மவ்லவி காரீ டபிள்யூ.எச் .எல் .எம் . றாமிஸ் ஆலிம் -காரியதரிசி , ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு .   

3.மவ்லவி ஸெய்யித் ஸஹ்ல் பின் ஸெய்யித் தாஹா மெளலானா , வலிகாமம் .

4. மவ்லவி    டபிள்யூ .முஹம்மத் ரிழா ஆலிம் பஹ்ஜி , வலிகாமம் .

5. மவ்லவி எச் .எல் .எம் .உஸ்மான் ஆலிம் ,வலிகாமம் .

6. மவ்லவி எம் .எம் .முக்தார் ஆலிம் , அதிபர் அல்காமம் அரபிக் கல்லூரி .

7. மவ்லவி இஸட் . எல் .எம் நஜ்முத்தீன் பஹ்ஜி , தடாலி .

8. மவ்லவி ஏ .எல் .எம் .அதாவுல்லாஹ் ஆலிம் பாகவி , வலிகாமம் .

9. மவ்லவி என் .டி .அப்துர் ரஸ்ஸாக் ஆலிம் ஜமாலி ,ஆசிரியர் அல் இல்ம் ,கொழும்பு .

10. மவ்லவி எம் .ஸெய்யித் அஹ்மத் ஆலிம்  பஹ்ஜி , காழியார் களுத்துறைபகுதி  .

11. மவ்லவி யு .எல் .எம் .ஹாமீம் ஆலிம் பஹ்ஜி , அதிபர் ஸாவியா அரபிக் கல்லூரி ,வலிகாமம் .

12. மவ்லவி என் .டி .ஏ  அபுல் ஜமால் முஹம்மத் பக்ருத்தீன்  ஆலிம் - கிருஷ்ணாஜிப்பட்டிணம் ,தஞ்சாவூர் .

13. மவ்லவி ஏ .எல் .எம் . கவுஸ் ஆலிம் பாகவி , பஞ்சிகாவத்தை கொழும்பு .

14 . மவ்லானா எம் .ஸெய்யித் பழ்லுல்லாஹ் பஹ்ஜி அகியோர்களாகும் .

இப்பொது அப்பிரசுரத்திலுள்ள சில விஷயங்களை நாம் பார்ப்போம் .

அன்று வஹாபிய கருத்துக்குரிய பிரச்சனையில் கதாநாயகனாக நின்று செயல்பட்டவர் குருநாகல் பறகஹதெனிய  என்னும் கிராமத்தைச் சேர்ந்த 'தர்வேஷ் ' என்பவராகும் . இவர் மார்க்கக் கல்வி கற்பதற்காக இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள பொதக்குடி என்னும் ஊரில் உள்ள மதராசாவிற்குச் சென்றார் . அங்கே இவருடைய ஒழுக்கமின்மை காரணமாக இவர் மத்ரஸாவிலிருந்து நீக்கப்பட்டார் . அதன்பின் வேலூரிலுள்ள மத்ரஸாவிற்கு சென்றார் . அங்கேயும் இவருடைய புத்தி சுவாதீனமற்ற நிலையைக் கண்டதால் அங்கிருந்தும் வெளியேற்றப்பட்டு ராய வேலூரிலுள்ள ஒரு சிறிய மதரஸாவில் சென்று சேர்ந்தார் .

அங்கே சேர்ந்து ஓரிரு மாதங்களே ஆன நிலையில் இவருடைய தீய நடத்தை காரணமாக அங்கிருந்தும் வெளியேற்றப்பட்டார் . இப்படி ஒவ்வோர் ஊராக அலைந்து திரிந்தவர் இறுதியில் இலங்கையில் உள்ள நிந்தவூர் என்ற ஊருக்கு வந்து சேர்ந்த பொழுது அவ்வூருக்கு இவர் தர்வேஷ் அப்துல் ஹமீது என்ற பெயரில் அறிமுகமானார் . அதுபோது இவர் போதை பொருட்களை உபயோகிப்பவராக இருந்துள்ளார் . அதன்பின் திடீரென காணாமல் போனவர் 1948 ஆம் ஆண்டு மீண்டும் திரும்பி வந்து ஒரு சங்கத்தை துவக்கினார் . அதுதான்  "அன்ஸார் ஸுன்னத் முஹம்மதியா " என்னும் இயக்கமாகும் .

இது இப்படியிருக்க சாய்ந்தமருது மாளிகைக் காட்டில் தன்னை மஜ்தூப் எனப் பாசாங்கு செய்து நடித்துக் கொண்டிருந்த குட்டி மஸ்தான் வெள்ளைக்குட்டி என்பவர் மணமாகிக் வாழ்ந்து கொண்டிருந்த தன் மகளை ஃபசகு    செய்யவைத்து  பறகஹதெனிய வெள்ளமம்முடரின் மகனான தர்வேஷுக்கு மணமுடித்து கொடுத்தார் .

இந்த தர்வேஷ் சவுதிக்கு போய் வந்தபின் அவ்வூரிலுள்ள மக்கள் அதுவரை கேள்விப்படாத பல்வேறு கருத்துக்களை இவர் பிரச்சாரம் செய்ய துவங்கினார் . இதனால் சாய்ந்தமருது மரைக்காமார்கள் தர்வேஷையும் , ஊரிலுள்ள உலமாக்களையும் பள்ளிவாசலுக்கு அழைத்து யார் சொல்வது சரியானது என்பதை நிரூபிக்க முயன்றனர் .

அதுசமயம் உலமாக்கள் சார்பாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை  மாவட்டங்களைச் சார்ந்த சுமார் நாற்பது உலமாக்கள் அழைக்கப்பட்டனர் .  ஆனால் அக்கூட்டத்திற்கு தர்வேஷ் வரவில்லை . இதனால் வேறுவழியின்றி அவருடைய கருத்துக்களை  நன்கு அலசி ஆராய்ந்தவர்கள் 02/10/1948 ஆம் தேதியன்று கல்முனை ஆறாம்குறிச்சி  தக்கியா பள்ளியில் வைத்து இவர் ஒரு வஹாபி என்று மார்க்கத்தீர்ப்பு அளித்தனர் .

  இதைக் கேள்விப்பட்ட தர்வேஷ் தமது சொந்த ஊரான பறகஹதெனிக்கு ஓடிப்போனார் . அதன்பின் சில மாதங்கள் கழித்து மாளிகைக் காட்டில் அவருக்குகொரு சொந்த இடம் கிடைத்ததால் மீண்டும் தனது பிரச்சாரத்தை துவக்கியவர் கல்முனைக்குடி மூன்றாம் குறிச்சிக்கும் வந்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார் .

இப்படி இவர் பல்வேறு இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்ததால் அந்தந்த ஊரில் இருந்தவர்கள் பல்வேறு பலவகையான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை நேரிட்டது . அத்துடன் பாமர மக்கள் வெகுவாகக் குழப்பப்பட்டனர் . இந்நிலையில் இதற்கொரு முடிவு காணப்பட    வேண்டும் என்று அனைவரும் ஆசைப்பட்டனர் . அதற்காக பலமுறை கல்முனைக்குடியைச் சேர்ந்த தலைவர்கள் மாநாடு ஒன்றை நடத்துவதற்குரிய  அவசியம் குறித்து தர்வேஷிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியும் அதற்கவர் சம்மதிக்கவில்லை .

தர்வேஷ் இசைந்து வராததைக் கண்ட அவர்கள் அதையெனும் மக்களுக்கு நாம் தெளிவுபடுத்த வேண்டும்  என்பதற்காக 13/07/1951 ஆம் நாள் பிற்பகல் மூன்று மணிக்கு கடற்கரை பள்ளிவாசல் முற்றத்தில் வைத்து நத்வத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி பி.எம் .மக்பூல் ஆலிம் அவர்களின் தலைமையில் மரைக்காமார்களின் ஒத்துழைப்போடு பிரம்மாண்டமான மாநாடு ஒன்று நடைபெற்றது .

அம்மாநாட்டில் நத்வத்துல் உலமா சபை போஷகர் மவ்லவி .எஸ் .எம் .ஏ . முஹம்மத் இஸ்மாயீல் ஆலிம் அவர்கள் மாநாட்டில் முக்கியமான அங்கத்தவராக பங்கேற்று வருகை தந்திருந்த பாமரர்கள் அனைவருக்கும் தெளிவை ஏற்படுத்தினார் . இவரின்றி இன்னும் பல உலமாக்களும் உரையாற்றும் போது தர்வேஷின் போக்கை குறித்து தெளிவுபடுத்தினர் . ஆனால் தர்வேஷ் வருகை தரவில்லை .

இம்மாநாடு நடைபெற்று ஒரு மாதத்திற்குப் பின் 11/08/1951ஆம் நாள் தல்கஸ்பிடி இஸ்லாம் மத ஆராய்ச்சியாளரின் தரப்பிலிருந்து துண்டு பிரசுரமொன்று வெளியிடப்பட்டது . அதில் 12 விஷயங்களைக் குறித்து சொல்லப்பட்டு அவைகளை செய்பவர்கள் தெய்வ வணக்கம் புரிபவர்கள்  என்றும் அவைகளுக்கு தக்க பதிலளிப்போருக்கு 1000
 ருபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்பிரசுரத்தில் சொல்லப்பட்டிருந்த கருத்துக்களை தெளிவுபடுத்த ஒரு விவாதத்திற்குரிய மாநாடு ஒன்று நடத்தியே தீர வேண்டும் என்பதற்காக மூன்றாம் முறையாக குழுவொன்று உண்டாயிற்று . அதில் ஏ.முஹம்மத் காஸிம் , இ.ஆதம்பாவா , எஸ்.ஏ .மஜீத் , எம்.எச் .எம் . அப்துல் காதர் , எம் .எச் .எம் .ஹனீபா , வி.வி.இ.எல் .முஹைதீன் ஆகியோர் நிர்வாகிகளாக இயங்கினர் .

இக்குழு நத்வத்துல் உலமா சபையையும் , அன்ஸார் ஸுன்னத் சங்கத்தாரையும் விவாதிக்க வருமாறு பகிரங்கமாக அழைத்ததன் பேரில் இரு சாராரும் சம்மதம் தெரிவித்தனர் . அதில் மொத்தம் 22 விஷயங்கள் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டன . அவையாவன ,.....

விவாதிக்க வேண்டிய விஷயங்கள் : 


1. அல்லாஹ் அர்ஷில் தான் இருக்கிறான் . 

2. ரஸூலுல்லாஹ்வுக்கு ஷபாஅத் கிடையாது .

3. மவ்லித் ஓதுவது கூடாது .

4.தராவீஹ் எட்டு ரக்அத்துகளே 

5.ஸதகத்துல் பித்ரு ஒரு கொத்து அரிசி மட்டும் தான் 

6.கல்முனைக்குடி  போன்ற கிராமங்களில் பல ஜும்மாக்கள் நடத்தலாம் .

7. இமாம் பூஸிரி காபிர் (நவூதுபில்லாஹ் ) 

8.ஸியாரதுல் குபூர் ஹராம் 

9.ஹயாத்துன் நபி ஹிழ்ர்  இறந்துவிட்டார் . 

10. தொழுகையில் பாத்திஹா சூராவிற்குப் பின் வழல்லாலீனுக்கும் , ஆமீனுக்கும் இடையில் ரப்பிஃக்பிர்லி என்று சொன்னால் தொழுகை பாத்திலாகி விடும் . 

11. தரீக்காக்கள் அனைத்தும் வழிகேடு 

12. அல்லாஹ் அல்லாத வலிமார்களுக்கு நேர்ச்சை செய்வது தெய்வ வணக்கமாகும் . 

13. கப்ரை கட்டுவது ஹராமாகும் .

14. கப்ருகளில் குறிப்பிட்ட நாளில் ஒன்று சேருவதும் மவ்லித் போன்றவைகளை ஓதுவதும் பித்அத்தாகும் .

15. கொடி ஏற்றுவதும் அதற்காக நேர்ச்சை செய்வதும் ஷிர்க்காகும் .

16. ஜனாஸாவை கொண்டு செல்லும்போது சத்தமாக கலிமா போன்றவைகளை கூறுவது வழிகேடு .

17. தல்கீன் , நாள் குறிப்பிட்டு பாத்திஹா ஓதுவது வழிகேடு 

18. மரணித்தவருக்காக குர்ஆன் ஓதுவது வழிகேடு 

19. ஜும்மாவில் மஹ்ஷர் ஓதுவது வழிகேடு 

20 . ஸுபுஹ் தொழுகையில் ருகூவுக்குப் பின்  குனுத் ஓதுவது வழிகேடு 

21. தொழுது முடிந்தபின் கூட்டு பிரார்த்தனை செய்வது வழிகேடு 

22. நேர்ச்சை செய்யப்பட்ட பிராணிகளை உண்பது ஹராம் .


இருவழிக்கு ஒருவழித் தேர்வு  மார்க்க மாநாட்டின் சாராம்ச வரலாறு    :

1951 புரட்டாசி மாதம் 15ஆம் தேதி சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு கல்முனை முற்றவெளியில் வைத்து  விவாதத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டது . இதில் கல்முனை தொகுதி பாராளுமன்ற பிரதிநிதி இராசவால் முதலியார் எம் .எஸ் .காரியப்பர் ஜேபி.யு .எம் கல்முனை பிரதேச சபை தலைவர் அவர்களின் தலைமையில் விவாதத்திற்குரிய மாநாடு ஆரம்பமாயிற்று . மவ்லானா முஹம்மத் அலி மரைக்காயர் பின் அஹ்மத் மரைக்காயர் அவர்கள் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்கள் . காரியதரிசியாக அஸ்ஸெய்யித் மவ்லவி பழ்லுல்லாஹ் மவ்லானா அவர்கள் அமர்த்தப்பட்டிருந்தார்கள் . மவ்லவி ஏ.எம் .இப்ராஹீம் அவர்களின் கிராத்துடன் கூட்டம் துவங்கிற்று .

அன்ஸார் ஸுன்னத் சார்பாக வருகை தந்தவர்கள் :

1 . தர்வேஷ் பக்ரி

2.  மவ்லவி அஹ்மத் குர்ணி

3. நெய்னா முஹம்மத் ஆலிம்

4. ஏ .எச் . முஹம்மத் இஸ்மாயீல் ஆலிம்

5. யு .எல் .எம் . குத்தூஸ்

ஆகியோருடன் பெயர் சொல்லப்படாத நான்கு  நபர்களுமாக ஒன்பது நபர்கள் கலந்து கொண்டனர் . இவர்களில் தர்வேஷும் , அஹ்மத் குர்ணியும் தான் பேச்சாளராக இருந்தனர் .

நத்வத்துல் உலமா சார்பாக வருகை தந்தவர்கள் :

1 . முஹம்மத் இப்ராஹீம் ஆலிம் , காத்தான்குடி

2. எம் .எச் . முஹைதீன் ஆலிம் , மருதமுனை

3. எஸ் .எம் .ஏ . முஹம்மத் இஸ்மாயீல் ஆலிம் , கல்முனைக்குடி    
              
4. பி .எம் . மக்பூல் ஆலிம் ,  கல்முனைக்குடி

5. எஸ் .எம் .கே . அப்துல் காதர் மவ்லானா ,சாய்ந்தமருது

6. ஏ . எம் .முஸ்தபா ஆலிம் , சாய்ந்தமருது

7. எஸ் .எல் .முஹம்மத் இஸ்மாயீல் ஆலிம் ,நிந்தவூர்

8. இ .எல் . முஹம்மத் இஸ்மாயீல் ஆலிம் , அட்டாளைச்சேனை

9. ஏ .எம் .புஹாரி ஆலிம் ,அக்கரைப்பற்று

ஆகிய ஒன்பது நபர்களாகும் .


விவாத மன்றத்தை சுற்றி  முள்கம்பி வேலியிடப்பட்டிருந்ததோடு காவல்துறையைச் சேர்ந்த ஏ.எஸ்.பி உட்பட பதினாறு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது . அத்துடன் ஒழுங்குபடுத்தப்பட்ட   இடத்தின் வலப்பக்கமாக நத்வத்துல் உலமா சபையைச் சேர்ந்தவர்களும் ,இடப்பக்கமாக அன்ஸார் ஸுன்னா சங்கத்தினரும் மத்தியில் தலைவர் ,நீதிபதி ,காரியதிரிசி போன்றோரும் அவரருக்குரிய ஆசனங்களில் அமர்ந்திருந்தனர் . நுழைவாயிலுக்குரிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தோர் உள்ளேயும் மற்றவர்கள் வேலிக்கு அப்புறமாக இருந்து விவாதத்தை கவனித்தனர் . இதன்றி ஆயிரக்கணக்கான உலமாக்களும் ,பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்தனர் .

விவாதத்திற்கான நிபந்தனைகள் முதலில் தலைவரால்  வாசிக்கப்பட்டதை தொடர்ந்து விவாதம் ஆரம்பமாயிற்று . முதன் முதலாக தர்வேஷ் அழைக்கப்பட்டார் . விவாதத்தின் முதல் சுற்று மதியம் இரண்டு மணி வரை நடந்தது . அதுவரை ஆறு விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது . அது ,...

1. தல்கீன்
2.இறந்தோருக்கு குர்ஆன் ஓதுதல்
3.அல்லாஹ் அர்ஷில் தான் இருக்கிறான்
4.ஜனாஸாவிற்கு பின்னால் தக்பீர் கூறுதல் ,சாம்பிராணி போடுதல்
5.தொழுகை மூலமாக மைய்யித்திற்கு பிரயோஜனம் அளித்தல்
   ஆகியவற்றோடு இன்னொரு விஷயமுமாகும் .

இந்த ஆறு விஷயங்களுக்கும் பதில் அளிப்பதற்காக நத்வத்துல் உலமா சார்பில் மவ்லவி எஸ் .எம்.ஏ முஹம்மத் இஸ்மாயீல் ஆலிம் ,மவ்லவி எம்.எம்..இப்ராஹீம் ஆலிம் ,எஸ்.எல் .முஹம்மத் இஸ்மாயீல் ஆலிம் , இ.எல் .முஹம்மத் இஸ்மாயீல் ஆலிம் ,ஏ .எம் .முஸ்தபா ஆலிம் , ஏ .எம் .புஹாரி ஆலிம் ஆகியோர் வந்திருந்தனர் .

அதன்பின் பகல் இரண்டு மணிக்கு மதிய உணவிற்காக விவாதம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பமாயிற்று . இரண்டாம் சுற்றுக்கான நேரம் வந்தது . நத்வத்துல் உலமா சபையைச் சேர்ந்தவர்கள் ஆஜராகி அரைமணி நேரமாகியும் ,தர்வேஷும் அவரைச் சார்ந்தவர்களும் வரவில்லை . உடனே கூட்ட நிர்வாகிகளும் ,போலீசும் சென்று அவர்களை அழைக்க ,அவர்கள் வரமுடியாது என்று மறுத்து விட்டனர் . அதன்பின் அவர்களால் கொண்டு வரப்பட்ட நூல்களனைத்தும் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு தர்வேஷ் இல்லாமலேயே விவாதம் நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற்றது .

தர்வேஷ் வராததால் மேற்குறிப்பிட்ட ஏழாவது விஷயத்திலிருந்து இருபதாம் விஷயம் வரை விவாதிக்கப்பட்டு பிற்பகல் 4:30 மணியளவில்  நீதிபதி அல்லாமா முஹம்மத் அலி மரைக்காயர் அவர்களால் சத்தியக் கொள்கையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கு முழுக்க முழுக்க மாறுபட்ட தர்வேஷும் அவரைச் சார்ந்தவர்களும் வழிகெட்ட வஹாபிகள்  எனத் தீர்ப்பளிக்கின்றேன் என்னும் பத்வாவை வாசித்தார் . இவையனைத்தும் அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளாகும் .

அன்று தர்வேஷால் முன்வைக்கப்பட்ட கருத்துகளைத் தான் இன்றும் அனைத்து நவீன இயக்கங்களும் பிரச்சாரம் என்னும் பெயரில் வாந்தி எடுத்துக் கொண்டிருப்பது நாடறிந்த உண்மையாகும் . இவ்வியக்கங்கள் பல்வேறு பெயர்களில் புதுப் புது தோற்றங்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன . இந்த வகையில் ஒரு விசித்திரமான தோற்றத்தில் அனைத்து பாமர மக்களையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் ஒரு இயக்கமொன்று இந்த நாட்டை வந்தடைந்தது . அதைப்பற்றி இப்போது பார்ப்போம் .
தக்வியத்துல் ஈமான்

திங்களெம்கோமான் தாஹா நபி அவர்களின் முன்னறிவிப்பின்படி நஜ்த் என்னும் ஊரில் முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் என்பாரின் தோற்றம் ஏற்பட்டது . அவ்வியக்கம் தனது தீய கொள்கைகளை "கிதாபுத் தவ்ஹீத் " என்னும் நூல் வழியாக எடுத்துக் காட்டியது . அந்த நூலை உருது மொழியில் இந்திய தேசத்தைச் சேர்ந்த மவ்லவி இஸ்மாயீல் திஹ்லவி என்பார் "தக்வியத்துல் ஈமான் " என்னும் பெயரில் மொழிபெயர்த்து இந்திய மண்ணில் முதன் முதலாக வஹாபிய கொள்கையை பரப்பினார் .

இக்கொள்கைக்கு பலமான எதிர்ப்பு கிளம்பி ஷரீயத் படி   இஸ்மாயீல் திஹ்லவி கொல்லப்பட்டார் . அதன்பின் அக்கொள்கைகளை இவருடைய சிஷ்யர்களான ரஷீத் அஹ்மத் கங்கோஹி , காஸிம் நானோத்வி , கலீல் அஹ்மத் அம்பேத்வி , அஷ்ரப் அலி தான்வி போன்றோர் மிகவும் போற்றிப் புகழ்ந்ததோடு  இஸ்மாயீல் திஹ்லவியை ஷஹீத் என்றும் பறைசாற்றினர் . மேற்குறிப்பிட்ட அனைவரையும் தமது குருவாக ஏற்றுக்கொண்டவர் தான் தப்லீக் ஜமாத்தின் நிறுவனர் இல்யாஸ் காந்தலவி .இவரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் 'தப்லீக் ஜமாத் ' முகல்லித் வஹாபிகள் எனும் பெயரில் காட்சி தருகின்றனர் . இதனுடைய நோக்கமும் வஹாபியக் கொள்கையை பரப்புவது தான் .

இவ்வியக்கம் இலங்கை நாட்டுக்கு வந்த போது ,அதற்கு எதிராக மாத்தறையில் கோட்டக்கரை ஜும்மா பள்ளியில் 08-08-1965 ஆம் நாள் இஜ்திமா ஒன்று நடத்தப்பட்டது . அப்போது அதனுடைய முகமுடியை கிழித்தெறிய இம்மாநாட்டில் சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் அல் ஆரிபுபில்லாஹ் ,அல் முஹிப்பிர்ரஸூல் அஷ் ஷாஹ் அப்துல் காதிர் ஆலிம் ஸுபி காதிரி காஹிரி رضي الله عنه அவர்களுக்கும் பன்னிரெண்டு முகல்லித் வஹாபிகளுக்கும் இடையே விவாதமொன்று நடைபெற்றது . இதற்கு இரு சாராரின் சம்மதத்தோடு கீழ்கண்டோர்   நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டனர் .அவர்கள்,...

1.ஷெய்குல் பஹ்ஜி அல்ஹாஜ் மவ்லவி எச் .எல் . அப்துல் ஹமீத் (காலி அரபிக் கல்லூரி அதிபர் )

2. மவ்லவி பாஸில் ஏ.எல் .முஹம்மத் கவுஸ் பாக்கவி

3.ஜனாப் எம் .ஐ.எம் .காஸிம் மரைக்காயர் (காத்தான்குடி பிரதேசத் தலைவர் )

இக்கூட்டத்திற்கு ஜனாப் எம்.என்.எம்.ழியாவுத்தீன் ஜே .பி ஆலிம்     தலைமை தாங்கினார்கள் .இந்த விவாதத்தில் தாங்கள் தோல்வியுற்று விடுவோம் என்று தெரிந்து கொண்ட தப்லீக் ஜமாத்தினர் எந்தவொரு முடிவும் ஏற்படாத வண்ணம் கூச்சலையும் ,குழப்பத்தையும் ஏற்படுத்தி விவாத அரங்கை விட்டு வெளியேறியதோடு விவாதத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் தப்பும் தவறுமாக திரித்து எழுதி உண்மைக்கு புறம்பான பிரசுரம் ஒன்றையும் வெளியிட்டனர் .

ஆனால் உண்மையில் நடந்தது என்ன ? மூன்று நீதிபதிகளில் ஒருவரான மவ்லவி முஹம்மத் கவுஸ் பாக்கவி அவர்களின் கையெழுத்தை தப்லீக் ஜமாத்தினர் அன்னாரிடமிருந்து திருட்டுத்தனமாக பெற்று விவாத நிகழ்ச்சியை திரித்து தங்களுக்கு சாதகமாக வெளியிட்டனர் . இதை பொய்யென்று நிரூபித்து "விவேகமில்லாத மாநாடும் , வீணான தீர்ப்பும் " என்னும் தலைப்பில் சுன்னத் வல் ஜமாத்தினரால் பிரசுரமொன்று வெளியிடப்பட்டது . அதில் முஹம்மத் கவுஸ் பாக்கவி அவர்களால் 22-08-1965ல் தன்னிடம் பொய் சொல்லி கையெழுத்துப் பெற்று சென்றதாக எழுதப்பட்ட மடலும் பிரசுரிக்கப்பட்டது .







No comments:

Post a Comment